கசப்பு மருந்து சாப்பிட மக்கள் நோயாளிகளா?: மோடி பேச்சுக்கு ஜி.ராமகிருஷ்ணன் பதிலடி
தென்காசி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்களுக்கு கசப்பு மருந்து கொடுக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘கசப்பு மருந்து சாப்பிட மக்கள் நோயாளிகளா?' என கேள்வி எழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.
நேற்று தென்காசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டார செயலாளர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். அயூப்கான் வரவேற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சேது பாஸ்கரன், மாவட்ட குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.
அக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது :-
கண்டனம்...
பாரதீய ஜனதா பொறுப்பு ஏற்ற பிறகு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு குறையவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.
கசப்பு மருந்து...
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்தாக வேண்டும் என்று நரேந்திர மோடி கூறுகிறார். கசப்பு மருந்து யாருக்கு கொடுக்க வேண்டும்?. நோயாளிக்குத்தான் கொடுக்க வேண்டும்.
யார் நோயாளி...
இந்த அரசு நோயாளியா?, மக்கள் நோயாளியா? .இதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஒரே கொள்கை தான்...
மத்தியில் புதிதாக பதவி ஏற்று இருக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும், ஏற்கனவே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கும் கொள்கைகளில் எந்தவித வேறுபாடும் இல்லை' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
நன்றியுரை :
கூட்டத்தில் வட்டார குழு உறுப்பினர்கள் குணசீலன், வன்னியபெருமாள், அப்பாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், சங்கரி நன்றி தெரிவித்தார்.