2011ல் ஒரு மாதம் கழித்து நடந்த தமிழக வாக்கு எண்ணிக்கை.. இந்த முறை "நோ வெயிட்டிங்"!
சென்னை: 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின்போது வாக்குப் பதிவு முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை வாக்கு எண்ணிக்கைக்காக காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. வாக்குப்பதிவு முடிந்த 3 நாட்களிலேயே வாக்கு எண்ணிக்கை வந்து விட்டது.
தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை அதிகாரப்பூர்மாக இன்று அறிவித்தார்.
இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் மேற்கு வங்கத்திற்கு 6 கட்டங்களாகவும், அஸ்ஸாம் மாநிலத்திற்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. ஐந்து மாநிலங்களிலும் ஒரே கட்டமாக மே 19ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு, ஏப்ரல் 13ம்தேதி வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் மேற்கு வங்கத்திற்கு 6 கட்ட தேர்தல் நடந்ததால் வாக்கு எண்ணிக்கை அனைவருக்கும் தள்ளிப்போனது. அதாவது மே 13ம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதுவரை மற்ற நான்கு மாநிலங்களும் காத்திருந்தன.
ஆனால் இந்த முறை அந்தப் பிரச்சினை இல்லை. வாக்குப்பதிவு முடிந்த 3 நாட்களிலேயே தமிழகத்திற்கு வாக்கு எண்ணிக்கை வந்து விடுவதால் காத்திருப்பும், பதட்டமும் குறைந்து விட்டது.