அடையாற்றில் அடித்து வரப்பட்டு குப்பை போல குவிந்து கிடக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்
சென்னை: அடையாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் ஆங்காங்கே குப்பைகள் போல குவிந்து கிடக்கின்றன. இவற்றோடு கார்கள், குட்டி யானை எனப்படும் டாடா ஏஸ் வேன்கள், பைக்குகளும் எங்கிருந்தெல்லாமோ அடித்து வரப்பட்டு ஆங்காங்கே கரைகளில் குவிந்து கிடக்கின்றன.
இன்ன பொருள்தான் என்றில்லாமல் விதமான விதமான வீட்டு உபயோகப் பொருட்களை குப்பைகளாகப் பார்க்கும்போது மனசெல்லாம் கனத்துப் போகும். எத்தனை அரும்பாடு பட்டு இந்தப் பொருட்களை வாங்கியிருப்பார்கள் என்றும் வேதனை ஏற்படுகிறது.
அடையாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளம்தான் சென்னை நகரை பெரிய அளவில் வெள்ளக்காடாக்க முக்கியக் காரணம். அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளமே சென்னையை பதம் பார்த்து விட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பெரிய அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அது அடையாற்றில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி விட்டது. அதிலிருந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்த வெள்ளம்தான் பல ஆயிரம் வீடுகளை துவம்சம் செய்து விட்டது.
ஆற்றோர வீடுகள்
அடையாற்று வெள்ளத்தில் ஆற்றோரம் கட்டப்பட்டிருந்த பெரும்பாலான வீடுகள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக குடிசை வீடுகள்தான் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்துள்ளன.
வெறும் கூடுகளாக
பல வீடுகள் வெறும் கூடுகளாக காணப்படுகின்றன. கூரை போய் விட்டது. சுவர்கள் இடிந்து விட்டன. வீட்டில் இருந்த பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.
அடித்து வரப்பட்ட வாகனங்கள்
இது அனகாபுத்தூரில் காணப்படும் ஒரு காட்சி. இந்த வேன் எங்கிருந்தோ அடித்து வரப்பட்டு இங்கு கரை ஒதுங்கி நிலை குலைந்து காணப்படுகிறது. பெரும் சேதமடைந்துள்ள இந்த வேன் இப்பகுதியின் புதிய குப்பையாக மாறியுள்ளது.
பாலத்திற்குக் கீழே
அனகாபுத்தூரில் அடையாற்றின் மேலே உள்ள பாலத்துக்குக் கீழே பெரும் குப்பையாக தேங்கிக் கிடக்கும் வாகனங்கள். அனைத்தும் அடித்து வரப்பட்டவை.
துணியாவது காயட்டும்
இவையெல்லாம் அடித்து வரப்பட்ட வாகனங்களின் குப்பை. இதில் துணியைக் காயப் போட்டு வருகிறார்கள் இப்பகுதி மக்கள். அடிக்கிற கொஞ்சம் வெயிலில் கொஞ்சம் துணியாவது காயட்டுமே என்ற எண்ணத்தில்.
எவ்வளவு பொருட்கள்
இவையெல்லாம் ஆற்றில் அடித்து வரப்பட்டவை என்றால் நம்ப முடியாது. அத்தனையும் வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவைதான்.
இடிந்து போன வீடுகள்
இவை இடிந்து போன வீடுகளின் சுவர்கள். வீடு இருந்த தடமே இல்லாமல் போய் விட்டதால் இந்த வீடுகளில் வசித்து வந்தோர் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
ஏதாச்சும் மிஞ்சுமா
அடித்து வரப்பட்ட வாகனங்கள், பொருட்களில் ஏதாவது மிஞ்சுமா, எடுத்துப் பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வில் ஒரு குடிமகன்.
சோகத்தை மறைக்க ஒரு குளியல்
நடந்து விட்ட சோகத்தை தற்காலிகமாக மறந்து அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் அடையாற்றில் குளிக்கும் அப்பகுதி மக்கள்.