எத்தியோப்பியாவில் பலியான தமிழர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும்: ராமதாஸ்

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இரங்கல்...
எத்தியோப்பியாவில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் இரு நாட்களுக்கு முன் கொதிகலன் வெடித்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம், முத்துகிருஷ்ணன் ஆகிய இருவர் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிராதரவான குடும்பங்கள்...
கொதிகலன் வெடித்த விபத்தில் உயிரிழந்த இருவருமே ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களின் குடும்பங்களுக்கு இவர்கள் தான் வருவாய் ஆதாரமாக இருந்துள்ளனர். கும்பகோணத்தை அடுத்த வீராஞ்சேரியைச் முருகானந்தத்திற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற போதிலும், அவரது சகோதரர் மற்றும் சகோதரியை இவர் தான் கவனித்து வந்தார். உயிரிழந்த இன்னொருவரான அண்டக்குடி முத்துகிருஷ்ணனை நம்பி தான் அவரது தாய், மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருந்தார். இவர்களின் மறைவால் இரு குடும்பங்களும் ஆதரவற்றவையாகி விட்டன.
நடவடிக்கை...
எத்தியோப்பியா விபத்தில் கொல்லப்பட்ட இருவரின் உடலையும் சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு...
விபத்துக்குக் காரணமான சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து பன்னாட்டு விதிகளின்படி இருவரின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தருவதுடன், மத்திய, மாநில அரசுகளும் தங்களின் பங்காக தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க முன்வர வேண்டும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications