தோல்வியால் இந்திய அரசியலில் இருந்து காங். ஒதுக்கப் பட்டதாக அர்த்தம் இல்லை: ஞானதேசிகன் கருத்து
சென்னை: நாடு முழுவதும் குறைந்த இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் இந்திய அரசியலில் இருந்து அக்கட்சி ஒதுக்கப் பட்டதாக அர்த்தம் இல்லை என தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
16வது லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப் பட்டு வருகின்றன. அதன்படி, பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்.
அப்போது அவர் பேசியதாவது :-
லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதாகவே கருதுகிறோம். வாக்கு சீட்டால் ஆட்சி மாற்றம் நடப்பது மகிழ்ச்சியே.
பாஜக உள்ளிட்ட வெற்றி பெற்ற கட்சிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். குறைந்த இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், இந்திய அரசியலில் இருந்து காங்கிரஸ் ஒதுக்கப் பட்டதாக அர்த்தம் இல்லை
இனி வரும் காலங்களில் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அதனை காங்கிரஸ் மாற்றிக் கொள்ளும்.
பாஜக கூறுவது போல் நாடு முழுவதும் அலை வீசவில்லை. ஆனால், பாஜகவின் பிரச்சார வலிமை சிறப்பாக இருந்தது. பல நேரங்களில் பிரதமர் வேட்பாளராக இருந்தும் கூட மோடி பிரச்சாரங்களில் கலந்து கொண்டார். ஆனால், தனக்குத் தோன்றியதை புரட்டிப் பேசி பிரச்சாரம் மேற்கொண்டார்' என இவ்வாறு அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர காங்கிரஸ் தயாராக இருப்பதாக தெரிவித்த ஞானதேசிகன், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்ட பின்னர், இது தொடர்பாக விரிவாக பேசலாம் எனக் கூறி தனது பேட்டியை முடித்துக் கொண்டார்..