சென்னையில் விடிய விடிய சாரல் மழை... சில இடங்களில் கனமழை
சென்னை: வடகிழக்கு பருவமழை சற்றே ஓய்ந்து வெள்ளம் வடியத்தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பல பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. தாம்பரம், வண்டலூரில் கனமழை கொட்டியதால் மீண்டும் வெள்ளநீர் தேங்கத் தொடங்கியுள்ளது.
கடந்த 9ம் தேதி முதல் மழை கொட்டி வந்த நிலையில் 25ம் தேதி முதல் மழை நின்று வெயிலடிக்கத் தொடங்கியது. இதனையடுத்து சென்னையில் பல பகுதிகளில் தேங்கியிருந்த வெள்ளநீர் வடியத்தொடங்கியது. இயல்புநிலையும் திரும்பியது.
இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, காரணமாக தமிழகம், புதுவையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் பரவலான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்தது.
சென்னையில் சாரல் மழை
தென் கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதன் நகரும் வேகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால், கனமழை பெய்வதில் தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றிரவு சென்னையில் சாந்தோம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி உள்ளிட்ட இடங்களில் சாரல்மழை பெய்தது.
புறநகரில் கனமழை
தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இவைத்தவிர ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும் நேற்றிரவு மழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர்
வில்லிவாக்கம் சிட்கோ நகரிலும், தாம்பரம், முடிச்சூர், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது இந்த கழிவுநீருடன், மழைநீரும் கலந்து துர்நாற்றம் வீசிய நிலையில் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்த நிலையில் மழை மீண்டும் தொடங்கியுள்ளதால் அந்தபகுதிவாசிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் - நாகையில் மழை
கடலூர், சிதம்பரத்தில் இரவு முதல் மீண்டும் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் பலத்த காற்றுடன் ஒரு மணிநேரமாக கனமழை பெய்தது. மேலும் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமாக மழை புது வருகிறது.
கனமழை வெளுக்கும்
டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், கடலோர மாவட்டங்களை பொறுத்தவரை கனமழையோ அல்லது மிக கனமழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் கடலோர மாவட்ட மக்கள் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கூடுதல் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கப் பெறும் மழைப் பொழிவை விட இந்தாண்டு கூடுதலாக இதுவரை 485 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. சென்னையில் இதுவரை 114 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.