கவுண்டமணி நல்ல உடல்நிலையோடு உள்ளார்.. வதந்திகளை நம்ப வேண்டாம்!
சென்னை: ரசிகர்களால் கவுண்டர் மஹான் என அன்பாய் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து அவ்வப்போது விஷமிகள் சமூகவலைத்தளங்கள் வழியாக வதந்தி கிளப்பிவிடுகிறார்கள்.
அதேபோல இப்போதும், ஒரு வதந்தி பரவியது. அதிர்ச்சியடைந்தார் நகைச்சுவை நாயகன். தன்னைப்பற்றி தவறான தகவல் பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது வழக்கறிஞர் மூலம் காவல் துறை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
முகம் தெரியாத, யாரோ விஷமிதான் இதை செய்துள்ளார். அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடக்கியுள்ளனர்.

நலமாக உள்ளார்
ஆனால், "உண்மையில், கவுண்டமணி நலமாய் இருக்கிறார். திரைப்படங்கள் சார்ந்த கதை விவாதத்தில் தினமும் ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறார்" என்று, கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜயமுரளி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்
கடந்த ஆண்டில் மட்டும், மூன்றாவது முறையாக கவுண்டமணி உடல் நிலை குறித்து கண்டபடி சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பிவிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் கவுண்டமணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

முன்பும் புகார்
கவுண்டமணியின் வழக்குரைஞர் கே.சசிக்குமார், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த மனுவில், பரப்பப்படும் வதந்திகளைப் பார்த்து கவுண்டமணியின் நண்பர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதனால் கவுண்டமணியும், அவர் குடும்பத்தினரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காவல்துறை இப்படிப்பட்ட வதந்திகளைத் தடுக்க வேண்டும். மேலும் இந்த வதந்தியை பரப்புவோர் மீது காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நடவடிக்கை தேவை
இருப்பினும் இப்போதும் மீண்டும் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மஹான் ரசிகர்களின் பெரிய வேண்டுகோள்.












Click it and Unblock the Notifications