ஜல்லிக்கட்டு புரட்சிக்குப் பிறகு மாணவர்களைப் பார்த்து அரசு பயப்படுகிறது - நடிகை ரோகிணி எக்ஸ்க்ளூசிவ்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதற்கு பிறகு மாணவர்களைப் பார்த்து அரசு பயப்படுகிறது என நடிகை ரோகிணி கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களைப் பார்த்து அரசு பயந்துவிட்டது. அதனால் அவர்கள் ஹைட்ரோ கார்பன் போராட்டத்தில் பங்கெடுக்கக் கூடாது என பயமுறுத்தி வருகிறது என நடிகை ரோகிணி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகையும் இயக்குநரும் சமூக ஆர்வலருமான ரோகிணி ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்குள் அமிழ்ந்து கிடக்கும் விஷயங்களை பற்ரி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலில் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
விவசாயிகள் இரண்டு கோரிக்கைகளை தான் முன்வைக்கிறார்கள். விவசாயத்துக்காக கூட்டுறவு வங்களில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது அவர்களின் முதல் கோரிக்கை.
தாலியும் அடமானத்தில்!
இரண்டாவது கோரிக்கை, விவசாயத்துக்காக தாலியைக் கூட அடகுவைத்து அதை மீட்க முடியாமல் பலர் தவித்துக்கொண்டுள்ளனர். அந்த நகைகளை ஏலம் விடக் கூடாது என்பது அடுத்த கோரிக்கை.
மீத்தேன் எதிர்ப்பில் நம்மாழ்வார்
அடுத்து மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்பது அவர்கள் கோரிக்கை. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடிய போது தான் நம்மாழ்வார் அய்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது அவரை நேரில் பார்த்த நான், இந்த உடல்நிலையுடன் நீங்கள் போராட வேண்டுமா என்று கேட்டபோது போராடாவிட்டால் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அதன்பிறகு நிலைமை மோசமாகி விடும் என்று சொல்லி தன் உயிரையே இந்த திட்டத்தை எதிர்ப்பதற்காகக் கொடுத்தார்.
டெல்டா விவசாயிகளை கொலை செய்யும் அரசு
அவருடைய உயிரைக் காவு வாங்கிய திட்டத்தின் எதிர்ப்பை நாம் கையில் எடுக்க வேண்டும். அதுதான் நாம் விவசாயிகளுக்கு செய்யும் நன்றிக்கடன். மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் திட்டம் என பெயர் மாற்றிக்கொண்டு வந்துள்ளார்கள். இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த திட்டம் அவர்களை கொலை செய்வது போலான திட்டம். இதை நாம் அனுமதிக்கக் கூடாது.
மிரண்ட அரசு!
இந்த போராட்டத்தில் போராடவும் பங்கு பெறவும் முயற்சி செய்த போது அரசு அவர்களை பயமுறுத்தி அடக்கி வைத்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் எழுச்சியைப் பார்த்து அரசு பயந்துவிட்டது.
ஆர்.எஸ்.எஸ் பேரணி ஏன்?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களை அடக்குமுறை மூலம் வெளியேற்றிய ஒருவாரம் கழித்து மெரினாவில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்று நாம் பார்த்துள்ளோமா?
திசைதிருப்பும் நாடகம்
நம்மை திசைதிருப்புவதற்காக மாட்டுக்கறிக்கு தடை விதிக்கிறார்கள்.நாம் உடனே நம் கவனத்தை அங்கு கொண்டு செல்ல வேண்டும் என பாஜக அதைச் செய்கிறது. ஆனால் நாம் எந்த பிரச்சனையில் உறுதியாக நிற்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.