அரசு பஸ்சில் திடீர் தீ – அலறி ஓடிய பயணிகள்
மார்த்தாண்டம்: திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு சென்ற அரசு பேருந்தில் இஞ்ஜினில் திடீரென்ற தீ பற்றியது. இதனால் அலறியடித்து பயணிகள் இறங்கி ஓடியதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு செல்லும் அரசு போக்குவரத்து கழக பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு மாலை மார்த்தாண்டம் அருகே வந்து கொண்டிருந்தது. மார்த்தாண்டம் சாங்கை பகுதியில் வந்து கொண்டிருந்த போது பஸ்சுக்குள் திடீரென புகை சூழ்ந்தது. இதனால் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதற்குள் திடீரென பஸ்சின் இன்ஜினில் தீ பிடித்ததால் பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். உடனே அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து கதவை திறந்து பயணிகளை மீட்டனர். மேலும் சாலையோரம் கிடந்த மணலை அள்ளி கொட்டியும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைக்க முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்தனர்.
இதனால் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இருந்த போதிலும் பஸ்சின் முன் பகுதிகள், டிரைவர் இருக்கை, இன்ஜின் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாயின. பொதுமக்கள் திரண்டு வந்து உதவியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் மாற்று பேரூந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் பழைய பஸ்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் திடீரென பழுதாகி நடுகாட்டில் நிற்பதால் பயணிகள் இந்த பஸ்களில் பயணம் செய்யவே அஞ்சி நடுங்குகின்றனர். இந்நிலையில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தினால் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.