அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2020 வரை நீட்டிப்பு: ஜெயலலிதா
சென்னை: தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 2020ம் ஆண்டுவரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2012ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசுப் பணியாளர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 30.6.2016ல் முடிவடைந்தது. எனவே, 1.7.2016 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தப் புள்ளியை ஏற்கும் குழு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தெரிவு செய்துள்ளது.

அதன் அடிப்படையில் 1.7.2016 முதல் 30.6.2020 வரையிலான காலத்திற்கு அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணியாளர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டத்தை விட இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் சில கூடுதல் பயன்களுக்கு வகை செய்துள்ளது. இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாய் என தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7.50 லட்ச ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள், எவ்வித வயது வரம்புமின்றி இத்திட்டத்தில் பயன் பெற வகை செய்யப்பட்டுள்ளது. விபத்து காரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும்.
இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180/- ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாயை ஆண்டுதோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications