மிடாஸை கைகழுவ செம வாய்ப்பு கொடுத்த ரெய்டு... முதல்வர் வைக்கும் 'செக்' என்ன தெரியுமா?
மிடாஸ் நிறுவனத்துடனான மதுபானக் கொள்முதலை ரெய்டை காரணம் காட்டி முழுவதும் முறித்துக் கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சென்னை : முதல்வரை பகைத்துக் கொண்ட சசிகலா குடும்பத்தின் மிடாஸ் நிறுவனத்திடம் டாஸ்மாக்கிற்கு மதுபானங்கள் கொள்முதல் ஏற்கனவே குறைந்த நிலையில் தற்போது ரெய்டு காரணமாக மிடாஸ் உடனான உறவை முழுவதும் முறித்துக் கொள்ள அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினரை தாக்கி வரும் வருமான வரி புயலானது தொடர்ந்து 100க்கும் மேற்கட்ட இடங்களில் நீடித்து வருகிறது. சசிகலாவின் உறவினர்கள், உறவினர்களின் உதவியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜோசியர்கள் என்ற ஸ்கெட்ச் போட்டு களமிறங்கி இருக்கும அதிகாரிகள் சென்னை படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மிடாஸ் மதுபான ஆலைக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் இதற்குக் காரணம் டாஸ்மாக்கிற்கு வந்து இறங்கும் பீர் மற்றும் மதுவகைகள் இங்கிருந்து தான் கொள்முதல் செய்யப்படும். ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் நிலைமை தலைகீழாகிவிட்டது.

கொள்முதல் குறைப்பு
முதல்வர் பழனிசாமி சசிகலா குடும்பத்தை கட்சி, ஆட்சியில் இருந்து விலக்கி வைக்கத் தொடங்கியதில் இருந்தே டாஸ்மாக்கிற்கு மிடாஸில் இருந்து கொள்முதல் செய்யும் சரக்கு பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். மாதத்திற்கு சராசரியாக 48 லட்சம் சரக்கு பெட்டிகள் 11 நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன.

பழிவாங்கும் அரசு
இதில் அதிமுகவில் கொடிகட்டி பறந்த காலத்தில் சுமார் 12 லட்சம் பெட்டிகள் மிடாஸில் இருந்து வாங்கப்பட்ட நிலையில், அது படிப்படியாக குறைந்து தினகரன், முதல்வர் பழனிசாமி மோதலால் ஏழு லட்சம் பெட்டியாக குறைந்துள்ளது. அதுவும் இந்த மாதத்தில் 5 லட்சம் பெட்டியாக குறைந்த நிலையில் மிடாஸ் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

ரெய்டு கைகொடுத்திருக்கிறது
எப்படியாவது மிடாஸை கைகழுவிவிட வேண்டும் என்று முதல்வர் நினைத்தாலும் அதற்கு மூத்த அமைச்சர்கள் சிலர் முட்டுக்கட்டை போட்டதால் வேறு வழியின்றி சரக்குப் பெட்டிகள் வாங்கப்படுகின்றனர். கொள்முதலை தட்டிக் கழிக்க சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த அரசுக்கு ரெய்டு கை கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் முடிவு
எனவே அடுத்த மாதம் முதல் முழுவதும் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதலை நிறுத்திவிடலாம் என்று அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. அதே சமயம் ரெய்டை காரணம் காட்டி மதுபான கொள்முதலை நிறுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் சில ஆதரவுக்குரல்கள் முதல்வரை மொய்ப்பதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications