நெடுவாசல்.. கதிராமங்கலம்.. தொடர்கிறது போராட்டம்.. வேடிக்கை பார்க்கும் எடப்பாடி அரசு
டெல்டா பகுதிகள் பாலைவனமாக மாறக் கூடாது என்பதற்காக நெடுவாசல் கிராமத்தினரைத் தொடர்ந்து கதிராமங்கலம் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களை ஒடுக்கிவிட்டு அரசு செய்யப் போவது என்ன என்ற கேள்வி எழுந்
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்கள் 2ம் கட்டப் போராட்டத்தை 80 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். இதே போல கதிராமங்கலம் மக்களும் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் 40 நாட்களுக்கும் மேலாக முதல் கட்டமாக போராட்டம் நடத்தினர். மத்திய மற்றும் மாநில அரசுகள் கொடுத்த உறுதியின் பேரில் போராட்டம் நிறுத்தப்பட்டது.
மேலும், உறுதியளித்த மத்திய அரசு கர்நாடகத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பனை எடுக்க ஒப்பந்தம் போட்டது. இதனால் கடுப்பான மக்கள் 2ம் கட்ட போராட்டத்தை தொடங்கி 80 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
கைது
இந்நிலையில், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தொடங்கியுள்ளனர். அங்கு எண்ணெய் குழாயில் இருந்து வாயு கசிந்ததையடுத்து மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை அடித்து தாக்கினர் போலீசார். மேலும், மணியரசன், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வரின் அடாவடித்தனம்
இதுகுறித்து சட்டசபையில் பேசிய முதல்வர், கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ‘குறைவான தடியடி' நடத்தினர் போலீசார் என்றும் வேலை செய்யவிடாமல் தடுத்தவர் மட்டுமே கைது செய்யப்பட்டனர் என்று கூறியிருப்பது போராட்டக்காரர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாலைவனமாகும் நெல் களஞ்சியம்
நெடுவாசல் மக்களாக இருந்தாலும், கதிராமங்கலம் கிராமத்தினராக இருந்தாலும், அவர்களின் சொந்தப் பிரச்சனைக்காக ரோட்டுக்கு வந்து போராடவில்லை. நெல் களஞ்சியமாம் தஞ்சை, நாளை பாலைவனமாக மாறி உண்ணும் உணவிற்கு அடுத்தவரிடம் அரசு கையேந்தக் கூடாது என்ற உன்னத நோக்கத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
Recommended Video
ஆட்சி அதிகாரம் யாருக்காக..
எண்ணெய் கிணறு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்காக பூமி விஷத்தன்மையான பின்னர், மக்கள் எப்படி உயிரோடு அங்கே வாழ முடியும். மக்கள் உயிரோடு இல்லை என்றால் யாருக்காக இந்த ஆட்சி.. அதிகாரம்.. இப்போதே தண்ணீர் முழுக்க நிறம் மாறி விஷமாக இருக்கிறது. நெல் விவசாயம் அழியும் தருவாயில் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
என்ன செய்யப் போகிறது அரசு?
நெடுவாசலையும் கண்டு கொள்ளாமல், கதிராமங்கலத்தையும் காயடித்து என்ன செய்யப் போகிறது அரசு. மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு எந்த அளவிற்கு குனிந்து நடந்து கொண்டு நாற்காலிகளை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழக மக்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.
குறைந்த பட்ச கோரிக்கை
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனை வருவதை தடுக்க வேண்டும். கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கதிராமங்கலம் கிராமத்தில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வைக்கும் குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது நிறைவேற்றுமா தமிழக அரசு.