வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்.. திருவள்ளூர் அருகே பரபரப்பு
மதுக்கடையை அகற்ற கோரி பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்: தங்கள் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் அருகே உள்ள பகுதி பேரம்பாக்கம். இங்கு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இங்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு பொருளாதார ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும், பள்ளியின் அடிப்படை வசதிகளை குறிப்பாக பள்ளி சுற்றுச்சுவர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அத்துடன், தங்கள் பள்ளிக்கு அருகிலேயே செயல்பட்டு கொண்டிருக்கும் மதுக்கடையை மூட வேண்டும் என்றும் தங்களது வேண்டுகோளில் இணைத்து முழக்கமிட்டனர்.
இதனால் வகுப்புகளை புறக்கணித்து அரசு பள்ளி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை மாணவிகளில் சிலர் தூக்கி பிடிக்க, சிலர் ஆவேசமாக பேச, சிலர் முழக்கமிடவும் செய்தனர். மாணவிகள் நடத்திய இந்த உள்ளிருப்பு போராட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. அரசு பள்ளி மாணவிகளின் இந்த போராட்டம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.