”என் பேத்தியைக் கண்டுபிடித்து தாருங்கள்”- செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய தாத்தா
வாழப்பாடி: சேலத்தில் மாயமான தனது பேத்தியினை கண்டுபிடித்துத் தரக் கோரி செல்போன் டவரில் ஏறி நின்று போராட்டம் நடத்திய கூலித் தொழிலாளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டணம் அருகே உள்ள சின்னக் கவுண்டாபுரம் ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவர் ஒரு கூலி தொழிலாளி.
இவரது 16 வயது பேத்தி கடந்த 2 மாதத்துக்கு முன்பு திடீரென்று மாயமாகி விட்டார். இது குறித்து அவர் காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கடந்த மாதம் 1 ஆம் தேதியன்று வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடிவந்தனர். தனது பேத்தியை கண்டுபிடிக்காத போலீசாரை கண்டித்து அவர் இன்று காலை 8 மணிக்கு சின்னக்கவுண்டாபுரத்தில் தனியார் கல்லூரி எதிரே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வாழப்பாடி தாசில்தார் செல்வகுமார் மற்றும் காரிப்பட்டி போலீசார் வந்து 2 மணி நேரம் அவரிடம் பேசி அவரை கீழே இறக்கினார்கள். பின்னர் அவரை சேலம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.