சகாயம் விசாரணை: கணவரை காணோம் என்று புகார் கொடுத்த மனைவி
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற எனது கணவரை காணவில்லை என்று சட்ட ஆணையர் சகாயத்திடம் திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
கிணற்றை காணோம், ஊருணியைக் காணோம், கண்மாயைக் காணோம் என்று சட்ட ஆணையர் சகாயத்திடம் கிராம மக்கள் புகார்களை குவித்து வரும் நிலையில், கணவரைக் காணோம் என்று பெண் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
கிரானைட் குவாரிகள் மோசடி தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் மதுரையில் கடந்த 3 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி ஹேமத்தாய் பாய் என்பவர் சகாயத்திடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "நீர்வளம் மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் சோமசுந்தரம் மூலம் உங்கள் (சகாயம்) உயிருக்கு ஆபத்து உள்ளது. சோமசுந்தரத்தால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். அவர் ஒரு போலீஸ் புரோக்கர். லஞ்சம் வாங்கிக் கொடுப்பது உட்பட பல வேலைகளை செய்து வருகிறார்.
யார் மூலம் ஆபத்து
பிஆர்பி மூலம் உங்களுக்கு ஆபத்து இல்லை. ஆனால், சோமசுந்தரத்தால் உங்களுக்கு ஆபத்து வரலாம். இதே கிரானைட் பிரச்னையில் என் கணவரை சிலர் அழைத்துச் சென்றனர். ஆனால், அதன் பின்னர் அவர் காணவில்லை. எனவே, என் கணவரை கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும். அத்துடன், சோமசுந்தரம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
போலீஸ் அதிகாரி புகார்
சகாயத்தின் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் என்பவர் சகாயத்திடம் இன்று ஒரு புகார்மனு கொடுத்தார். அதில், "இப்போதைய கூடுதல் டிஜிபி ஜாங்கிட் மதுரையில் போலீஸ் உயர் அதிகாரியாக பணி செய்த காலத்தில் போலீசாருக்கு மொத்தமாக நிலம் வாங்கி அதை முறைப்படி பதிந்து கொடுத்தார்.
மீட்டு கொடுங்கள்
இதில் திருமோகூர் அருகே என்னைப் போன்ற போலீஸ் குடும்பங்களுக்கு நிலம் கிடைத்தது. ஆனால் பிஆர்பி கிரானைட் நிர்வாகத்தினர் என் நிலத்தை சட்ட விரோதமாக பறித்துக் கொண்டனர். அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். சகாயத்திடம் போலீஸ் அதிகாரியே புகார் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட்டுகள் புகார்
இதனிடையே கிரானைட் முறைகேட்டிற்கு மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சட்ட ஆணையர் சகாயத்திடம் புகார் அளித்துள்ளது. முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதால் மதுரை மாவட்டம் மேலூரில் மட்டும் 200-க்கும் அதிகமான கண்மாய்கள் அழிக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சங்கம்
இதனிடையே அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், சகாயத்திடம் அளித்துள்ள புகாரில், தமிழகம் முழுவதும் கனிம வள முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க உயர் நீதிமன்றத்திடம் வலியுறுத்த வேண்டும் என சகாயத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.