அதெப்படி பொண்ணுக்கு காஸ்ட்லி புடவை எடுக்கலாம்... கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!
விழுப்புரம்: திண்டிவனம் அருகே மணப்பெண்ணுக்கு அதிக விலையில் சேலை எடுத்ததால், தாயுடன் கோபித்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டை விட்டு வெளியேறினார். அதனால், இன்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப் பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த எண்டியூர் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் ஜெயபாரதி (26). ஐ.டி.ஐ படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஜெயபாதிக்கும், திண்டிவனத்தை அடுத்த இறையானூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று மாலை திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெண் அழைப்பு நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருமணம் நடைபெற திட்டமிடப் பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 19ம் தேதி மணப்பெண்ணிற்கு கல்யாணப் புடவை எடுப்பதற்காக ஜெயபாரதியின் தாய் மீரா மற்றும் உறவினர்கள் ஜவுளி கடைக்கு சென்றனர். அங்கு, பெண்ணுக்கு கல்யாணப் பட்டுசேலை, மாப்பிள்ளைக்கு வேட்டி-சட்டை மற்றும் உறவினர்களுக்கு ஜவுளியும் எடுக்கப் பட்டது.
வீட்டிற்கு திரும்பிய தாய் மீராவிடம் மணப்பெண்ணின் கல்யாணப் பட்டுச்சேலையின் விலை குறித்து ஜெயபாரதி விசாரித்துள்ளார். மீரா விலையைக் கூறவும் அதிர்ச்சியடைந்த ஜெயபாரதி, ஏன் இவ்வளவு அதிக விலையில் புடவை எடுத்தீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால், ஜெயபாரதிக்கும் அவரது தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெயபாரதி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
கோபம் குறைந்ததும் ஜெயபாரதி வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருவீட்டாரும் கல்யாண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், ஜெயபாரதி வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் ஜெயபாரதியை தேடி வந்தனர். ஆனால், எங்கு தேடியும் ஜெயபாரதி கிடைக்கவில்லை.
இதனால் ஜெயபாரதியின் அண்ணன் பக்தவச்சலம்(30) என்பவர் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மாயமான ஜெயபாரதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து நேற்று நடக்க இருந்த மணப்பெண் அழைப்பு நிகழ்ச்சியும், இன்று நடக்கவிருந்த திருமணமும் நிறுத்தப்பட்டது. இதனால், கலகலப்பாக இருக்க வேண்டிய கல்யாண வீடு களையிழந்து சோகமானது.