கல்யாணப் பரிசாக மாப்பிள்ளை பெண்ணுக்கு 5 லி. பெட்ரோல்.. கடலூரில் கலகல!
Recommended Video
கடலூர்: கடலூர் அருகே கல்யாணப் பரிசாக புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோலை அவரது நண்பர்கள் பரிசாக வழங்கினர்.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனமே தினந்தோறும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அது முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ. 85.15-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.94 காசுகளாகிவிட்டது.
பெட்ரோல் பரிசு
இதனால் அத்தியாவசிய தேவைகளின் விலையும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் திருமணத்தின் போது தங்கம், வெள்ளி, பாத்திரங்களை பரிசாக கொடுப்பதை போல் பெட்ரோலை பரிசாக கொடுத்து விட்டனர் கடலூர்வாசிகள்.
வரவேற்பு நிகழ்ச்சி
ஆம். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமாராட்சி கிராமத்தில் இளஞ்செழியன், கனிமொழி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தையொட்டி அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருமண மண்டபமே கலகலப்பு
திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். திருமணத்திற்கு வந்த அப்பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் புதுமணத் தம்பதியினருக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக கொடுத்தனர். இதனால் திருமண மண்டபமே கலகலத்தது.
ஆச்சரியம்
பெட்ரோலின் அவசியத்தையும் விலை உயர்வு குறித்து விழிப்புணர்வையும் இந்த பரிசு விளக்கியது. இந்த நிலை தொடர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து பின்னர் அரிசி, பருப்பு, பால் பாக்கெட்டுகளை பரிசாக காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.