குரு பெயர்ச்சி: மோடி, ஜெ., கருணாநிதி, ஸ்டாலின், விஜயகாந்த்- யாருக்கு எப்படி இருக்கும்?
சென்னை: ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். இவர் தேவர்களுக்கு எல்லாம் தலைவராவார்.
நாளை ஆகஸ்ட் 2ம் தேதி செவ்வாய்கிழமை குரு பகவான் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார். இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதுதான் இன்றைக்கு பலரது கேள்வியாக உள்ளது.
சமூக அந்தஸ்து, அரசியல் பதவி, ஆன்மிக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், தர்ம ஸ்தாபனங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரி கட்டுதல், அறங்காவலர் பதவி, நீதிபதி, கவர்னர் போன்ற அரசு உயர் பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருள்கடாட்சம் தேவை.
இப்போது சட்டசபை தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இல்லை என்றாலும் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு அரசியல் கட்சியினரிடையே இருக்கத்தான் செய்கிறது. கிரகங்களில் பெயர்ச்சி அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்
அரசியல்தலைவர்கள் பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், ஆகியோருக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர் படியுங்களேன்.
நரேந்திர மோடி யோக ஜாதகம்
நரேந்திர மோடி ஜாதகத்தில், கஜகேசரி யோகம், சந்திர மங்கள யோகம், வசுமதி யோகம், நீசபங்க ராஜயோகம், வலசி யோகம், லட்சுமி யோகம், எக்காள யோகம், பிரம்ம யோகம், ராஜயோகம் போன்ற யோகங்களுடன், மிக முக்கியமாக, இவருடைய ஜாதகத்தில், குரு, சுக்கிரன் கேந்திரங்களில் உள்ளதால், மிக யோகமான ராஜலக்ஷ்ண யோகம் உள்ளது.
மோடிக்கு லாபம்
பிரதமர் மோடி விருச்சிக ராசிக்காரர். இந்த குரு பெயர்ச்சியினால் மோடிக்கு லாபமே. எந்த பிரதமருக்கும் கிடைக்காத வெற்றி கிடைத்து, அதைகட்சிக்கு சமர்ப்பிப்பார். இவரின் வளர்ச்சியை மேலைநாடுகள் வரவேற்கும். தனக்கென ஒரு முத்திரையை அரசியலில் பதிப்பார் என்கின்றனர் ஜோதிடர்கள்.
முதல்வர் ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதாவின் ராசி சிம்மம். சுபஸ்தானமான இரண்டாம் வீட்டில், குரு பகவான் வரும் காலம் பொற்காலம் என்றே சொல்லலாம். இதுவரை மனதை வருத்திக் கொண்டிருந்த பிரச்னைகள் அகலும். விலகி இருந்தோரும், எதிர் அணியில் இருந்தோரும், தேடி வந்து சரணடைவர். இக்காலத்தில், வெற்றி மீது வெற்றி வந்து சேரும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
அரசியல் முன்னேற்றம்
குரு பெயர்ச்சி, மிக சிறப்பான ராஜ யோகத்தை தர உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி கிடைக்கும். தொழில் ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால், அரசியலில் செல்வாக்கு கூடும். எல்லாவிதத்திலும், முன்னேற்றம் உண்டாகும்.
கருணாநிதிக்கு புதிய மாறுதல்
கருணாநிதி ரிஷப ராசிக்காரர். மிருகசீரிடம் நட்சத்திரம். குரு பகவான், ஐந்தாம் வீடான கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது, பூர்வ புண்ணிய புத்திரஸ் தானமாகும். புத்திரர்கள் ஆற்றல் பெறுவர். பழைய பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். பிரிந்து கிடப்போரை இணைக்கும் முயற்சி வெற்றி அடையும்.
விஜயகாந்த் விரய ஸ்தானம்
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் விஜயகாந்தினுடையது குரு பகவான், 12ம் இடமான விரய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். பதவி, பணம், செல்வாக்கு என, உருவாக்கி வைத்தவற்றை எல்லாம் இழக்க வேண்டிய நிலை உருவாகும். எனினும், 6ம் இடத்தை, குருவின், 7ம் பார்வை படுவதால், பெரிய இழப்பீடுகள் இல்லை. உள்ளாட்சி தேர்தல் சற்று சாதகமாக அமையலாம்.
ஆலய வழிபாடு
மனதில் நிம்மதி இல்லாமல் போகும். வளைந்து நெளிந்து போனால் மட்டுமே, வாழ முடியும்; நிலைக்க முடியும் என்பதை உணரும் நிலை ஏற்படும்.
ஆலய வழிபாடு, மனதிற்கு நிம்மதியை உண்டாக்கும். உடல்நிலை சீராகும். நோயில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சி அடையலாம்.சரியான முடிவை எடுக்க முடியாமல் திணறி வந்த நிலை மாறும்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்
ஸ்டாலின் சிம்மராசி பூரம் நட்சத்திரம். சுபஸ்தானமான இரண்டாம் வீட்டில், குரு பகவான் அமர்ந்துள்ளார். செல்வாக்கு அதிகரிக்கும். சொல்வாக்கிற்கு மதிப்புண்டாகும். உறவுகளும், நட்புகளும் மீண்டும் வந்திணைவதால், பலம் அதிகரிக்கும்.
தலைமை ஏற்கும் சூழல்
ஸ்டாலினுக்கும் இவரது தந்தைக்கும், குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளதால், உள்ளாட்சி தேர்தலில், ஆளும் கட்சியினருக்கு சவால் விடும் அளவிற்கு, வெற்றிகளைப் பெறலாம். குடும்பத்தில் நிலவிய சிக்கல் அகலும். எல்லாருடனும் சுமுக போக்கு உண்டாகும். கட்சிக்குள் இருக்கும் குழப்பம் அகலும். தலைமை ஏற்கும் சூழல் தானே உருவாகும். அரசியலில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புத்துணர்ச்சியும், செயலில் வேகமும் இருக்கும்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
குரு பெயர்ச்சி, இழந்த செல்வாக்கை உயர்த்தி, மீண்டும் தலைமை பதவி அல்லது பதவி உயர்வு என்கிற உயர்ந்த நிலையை அடைந்து, வெற்றி வாகை சூட வைப்பார் என்கின்றனர் ஜோதிடர்கள்.