மோடி - ஜெ. சந்திப்பு பற்றி கொச்சை விமர்சனம்.. ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது ஹெச்.ராஜா ஏடிஜிபியிடம் புகார்
சென்னை : பிரதமர் மோடி, ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா புகார் மனு அளித்துள்ளார்.
கடந்த 7-ம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினார். இதனை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனிடம் பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று புகார் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா பேசியதாவது...
ஒரு மாநிலத்தின் முதல்வரை பிரதமர் சந்தித்துப் பேசுவது இயல்பானது. ஆனால், பிரதமர் மோடி - முதல்வர் ஜெயலலிதா சந்திப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். இருவருக்கும் இடையேயான நட்பை களங்கப்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.
இவ்வாறு எச்.ராஜா கூறியுள்ளார்.
இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் எம்.பி.யான ஜே.கே.ரித்தீஷும் கூடுதல் டிஜிபி ராஜேந்திரனிடம் இன்று மனு அளித்தார்.












Click it and Unblock the Notifications