முதுகெலும்பே இல்லாத கோழை கமல்.. எச். ராஜா "ஷாக்கிங்" பேச்சு!
முதுகெலும்பில்லாத கோழை கமல் முதல்வர் பதவிக்கு ஆசைப்படலாமா என்று பாஜகவின் எச். ராஜா கேட்டுள்ளார்.
சென்னை: முதல்வராக யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால் முதுகெலும்பே இல்லாத கோழை கமல் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே கமல் பேசுவது, எழுதுவது அனைத்துமே அரசியலாகி வருகிறது. அவர் சினிமாவில் நடிக்கும் போது கூட இத்தனை விமர்சனங்களை சந்திக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நாள் முதலே விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
கமலுக்கு எதிரான சர்ச்சையை முதலில் தொடங்கி வைத்தவை இந்து அமைப்புகள்தான். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியக் கலாசார பண்பாடுகளைக் கெடுக்கிறது. தமிழர்கள் உயிரினும் மேலாகப் போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கிண்டலடிக்கும் காட்சிகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும் அந்நிகழ்ச்சியில் பங்குபெறுவர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அத்துடன் நடிகர் கமல்ஹாசனின் வீடும் முற்றுகையிடப்பட்டது.

சேரி பிஹேவியர்
இது போதாது என்று பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், நடிகை ஓவியாவின் நடவடிக்கைகள் குறித்து சேரி பிஹேவியர் என்று குறிப்பிட்டார். இதற்கு பல சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. அதோடு தமிழக அரசியல் நிலவரம் குறித்து கொளுத்தி போட பற்றி எரிந்தது.

சர்ச்சை நாயகன் கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலுக்கு எதிராக இப்போது பல்வேறு சர்ச்சைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இந்த நிலையில் டுவிட்டரில் அவர் பதிவிட்ட கருத்து பரபரப்பை பற்றவைத்துள்ளது.

கமல் டுவிட்டர்
முதல் டுவிட்டில், 'அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்' என்று பதிவிட்டார்.

முதல்வர்
அடுத்ததாக 'புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கையில் நாளை வரும் சேதி' என்று கூறியிருந்தார். தொடர்ந்து கவிதையாக பதிவிட்டுருந்த கமல் ' தோற்றிறந்தால் போராளி... முடிவெடுத்தால் யாம் முதல்வர்' என்று பதிவிட்டது பலரையும் கருத்து சொல்ல வைத்து விட்டது.

டுவிட்டர் அரசியல்
பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி எச். ராஜாவரை பலரும் கமல்ஹாசனை வசைபாடி வருகின்றனர். டுவிட்டரில் அரசியல் செய்யவேண்டாம் என்று தமிழிசை பொங்கியிருந்தார். தேசிய செயலாளர் எச். ராஜாவோ, திட்டி தீர்த்து விட்டார்.

எச். ராஜா பேட்டி
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, முதல்வராக கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றார்.

நடுங்கிய கமல்
ஆனால் கமல் முதல்வராக தகுதி உள்ளதா? ஏனெனில் விஸ்வரூபம் படம் வெளியிடும்போது பல அமைப்புகள் போராட்டம் நடத்தியதற்கு பயந்து நடுங்கி அழுதார், நாட்டை விட்டே செல்கிறேன் என்று கூறினார்.

முதுகெலும்பு அற்ற கோழை
இதற்கே இப்படி செல்கிறார் என்றால் இவர் முதல்ரானால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அதை சமாளிக்க முடியாமல் வெளிநாட்டுக்கே சென்று விடுவார். அதன் பிறகு தமிழ்நாட்டு மக்களின் கதி என்ன? கமல் ஒரு முதுகெழும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.

கடும் தாக்கு ஏன்
ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன போது வரவேற்ற பாஜக தலைவர்கள் பலரும் கமலின் அரசியல் பதிவுக்கு இப்படி வரிந்து கட்டிக்கொண்டு கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications