சட்டசபை காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பவேண்டும்: ஹெச்.ராஜா
திருப்பூர்: சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மக்களுக்கு நேரடியாக ஊடகம் மூலம் ஒளிபரப்பினால் நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளமுடியும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். ஐ.ஐ.டி. எதிராக போராடியவர்களை தமிழக அரசு, குண்டர் சட்டத்தில் கைது செய்திருந்தால், பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.
தாராபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர், பெரியார் பெயரில் ஏற்படுத்தப்பட்ட மாணவர் அமைப்பில் 10 மாணவர்கள் கூட இல்லை. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் நீங்கள் அமைப்பு வைத்துக்கொள்ளலாம். நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால் ஐ.ஐ.டி. பெயரை பயன்படுத்தக்கூடாது என்பதுதான் அந்த விதி. ஆனால் மாணவர்கள் ஐ.ஐ.டி. பெயரை உபயோகப்படுத்தியுள்ளார்கள். அடிப்படை நிபந்தனைகளை மீறியுள்ளார்கள். இதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. பிரதமர் மோடியை எதிர்த்து பேசியதாலும், இந்து மதத்திற்கு எதிராக பேசியதாலும் அங்கீகாரம் ரத்து செய்ததாக பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்த பிரச்சினைக்கும், மோடி அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஐ.ஐ.டி. என்பது சுயஆட்சி அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு. நிர்வாக ரீதியாக நிறுவனத்தின் விதிகளை மீறியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. ஐ.ஐ.டி. எதிராக போராடியவர்களை தமிழக அரசு, குண்டர் சட்டத்தில் கைது செய்திருந்தால், பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். ஐ.ஐ.டி. நிர்வாகம் பிரச்சினைக்குரிய மாணவர்களுடன் எந்த வகையிலும் சமரசத்திற்கும் போகக்கூடாது. அமைப்பின் அங்கீகாரம் வாபஸ் பெற்றதை ரத்து செய்யக்கூடாது என்றார்.
சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை மக்களுக்கு நேரடியாக ஊடகம் மூலம் ஒளிபரப்ப வேண்டும் என்பது எனது கருத்து. அப்போதுதான் நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளமுடியும் என்றார் ஹெச்.ராஜா.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது பிறந்த நாளில், ‘எங்களை யாராவது அடிமைப்படுத்த நினைத்தால் நான் விடுதலை குரல் எழுப்புவேன்' என்று பேசி இருக்கிறார். இந்த நாட்டில் யாரையும் யாரும் அடிமைப்படுத்த நினைப்பதில்லை. அவர்களிடமிருந்து நான் அடிமை தனத்தை விரும்பமாட்டேன் என்ற வார்த்தை வந்திருப்பதை பெரிய மாற்றமாக கருதுகிறேன். கடைசி கட்டத்திலாவது அடிமையாக இருக்கக்கூடாது என்கிற எண்ணம் தி.மு.க. தலைவருக்கு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications