சாரண-சாரணியர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி.. ஸ்டாலினுக்கு எச்.ராஜா பதில்
சென்னை: சாரணர் - சாரணியர் இயக்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் நெஞ்சில், காவி நஞ்சை கலக்கும் வகையில் எச்.ராஜாவுக்கு சாரணர்-சாரணியர் தலைவர் பதவியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக திமுக செயல் தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து, எச்.ராஜா பேட்டியொன்றில் கூறுகையில், செப்டம்பர் 16ல் சாரணர்- சாரணியர் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். எனது தந்தைக்கு அந்த அமைப்போடு தொடர்புண்டு. எனவே நண்பர்கள், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நான் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். நிச்சயம் போட்டியிடுவேன்.
சாரணர் - சாரணியர் தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அந்த இயக்கத்தினர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே நான் போட்டியிடுகிறேன். என்னை போட்டியிட கூடாது என தடுப்பதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு எச்.ராஜா தெரிவித்தார்.