சென்ற வருடம் இதே தேதியில் மோசமாக வைரலான எச்.ராஜா.. ஏன் தெரியுமா?
சென்ற வருடம் இதே தேதியில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா சாரணர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
சென்னை: சென்ற வருடம் இதே தேதியில் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா சாரணர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
சரியாக ஒரு வருடம் கழித்து அவர் மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளார். விநாயகர் சதுர்த்திக்காக புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர்.
அது மசூதி இருக்கும் இடம் என்பதால்,பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சென்ற பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார்.மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது.
சாரணர் தேர்தல்
சென்ற வருடம் தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் கல்வி இயக்குநர் மணி வெற்றி பெற்றார். அவர் இந்த தேர்தலில் போட்டியிட்ட போதே பெரிய அளவில் பிரச்சனை ஆனது குறிப்பிடத்தக்கது.
என்ன ஒற்றுமை
இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தேர்தல் முடிவுகள் வெளியானது இதே தேதியில்தான். ஆம் சென்ற 2017ம் வருடம் செப்டம்பர் 16ம் தேதிதான் சாரணர் தேர்தல் முடிவுகள் வெளியானது.
ஒரே நாளில் கலாய்
ஒரே நாளில் அடுத்தடுத்த வருடம் சரியாக பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் எச்.ராஜா. இன்று பேஸ்புக் மெமரி எடுத்து பார்த்தவர்கள் எல்லோரும் கண்டிப்பாக எச்.ராஜா மீம் ஒன்றை கடந்து வந்திருப்பார். இதில் என்ன சோகம் என்றால் அடுத்த வருடம் மெமரியிலும் இது காட்டும். இதனால் அவருக்கு இந்த நாள் சரியில்லை என்று பேஸ்புக்கில் நெட்டிசன்கள் விமர்சனம் வைக்கிறார்கள்.
செப்டம்பர் மாதம்
அதேபோல் பாஜகவினருக்கு செப்டம்பர் மாதமே சரியில்லை என்றுதான் கூறவேண்டும். தமிழிசை இதேமாதம்தான் சோபியா விவகாரத்தில் சிக்கி ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று வைரலானார். பாஜகவின் கொள்கைக்கு எதிரான கொள்கை கொண்ட அண்ணாவும் , பெரியாரும் பிறந்தது இதே மாதம்தான். செப்டம்பர் 15ம் தேதி அண்ணாவும், செப்டம்பர் 17ம் தேதி பெரியாரும் இதே மாதத்தில் பிறந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.