ஹாசினி கொலை வழக்கு... தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட்
ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Recommended Video
செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தாய் கொலை வழக்கில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் வரும் 30-ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் குற்றவாளி தஷ்வந்த் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு
தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தஷ்வந்த் மீது சென்னை காவல் ஆணையர் குண்டர் சட்டம் பாய்வதாக அறிவித்தார். இந்நிலையில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அவருடைய தந்தை சேகர் (50) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஜாமீன் வழங்கியது
இந்த வழக்கு விசாரணையின் போது போலீஸார் குற்றத்தை நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யாததால் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் ஜாமீன் கொடுத்தது.
மும்பையில் கைது
எனினும் இந்த வழக்கில் அவ்வப்போது தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இதனிடையே கடந்த 2-ஆம் தேதி தஷ்வந்த் தனது தாய் சரளாவை பணத்துக்காக கொலை செய்து விட்டு தப்பியோடினார். அவரை டிசம்பர் 6-ஆம் தேதி போலீஸார் மும்பையில் கைது செய்தனர். மும்பை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
30-ஆம் தேதிக்குள் ஆஜர்படுத்த உத்தரவு
இந்நிலையில் ஹாசினி கொலை வழக்கில் கடந்த 5-ஆம் தேதி தஷ்வந்த் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். தற்போது தாய் சரளா கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால் வரும் டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் தஷ்வந்த்தை ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.