கொன்றது யார்.. ஏன்.. எதற்காக.. கன்னித்தீவு கதையாக நீளும் ராமஜெயம் கொலை வழக்கு!
திருச்சி: ராமஜெயம் கொலைவழக்கு கன்னித்தீவு கதையாக நீள்கிறது. கொலைக்கான காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆள் யார் என்றும் நெருங்க கூட முடியவில்லை.
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு திருச்சியில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கினை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
ஆனால் கடந்த 32 மாதகாலமாக எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என ராமஜெயத்தின் மனைவி லதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
‘உண்மைகளை வெளிக்கொண்டுவர, 'வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும், போலீஸாரின் காலதாமதத்தால் தங்களுக்கு நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கை இழந்துவிட்டோம்' என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி சத்யநாராயணா முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகளை நெருங்கும் நிலையில் விசாரணை உள்ளதால், கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கால அவகாசம் வழங்கி விசாரணையை மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இந்த ஒருமாத காலத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துவிடுவார்களா? என்பது சிந்துபாத் கன்னித்தீவை கண்டுபிடித்த கதைதான்.
ஸ்காட்லாண்டு யார்டு
தமிழக போலீசாரைப் போல புத்திசாலி போலீசார் யாரும் என்பது ஒவ்வொரு முறையும் போலீஸ் மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் முதல்வர்கள் கூறும் புகழுரை.
ஸ்காட்லாண்டு போலீஸாருக்கு இணையாக வர்ணிக்கப்படுகிறது தமிழக காவல்துறை. ஆனால் ராமஜெயத்தின் கொலைக்கான காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.
எப்போதும் எம்.டிதான்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் அரசியலுக்கு முதுகெலும்பாக, நிழலாக வலம் வந்தவர்தான் ராமஜெயம்.
பெங்களூரில் எம்.பி.ஏ. முடித்த கையோடு, பிசினஸ் செய்ய ஆரம்பித்தார் ராமஜெயம். மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற வெளிமாநிலங்களில் போர்வெல் போடும் கான்ட்ராக்ட், ஆந்திராவில் சுரங்கத் தொழில், கிரானைட் குவாரி, உயர் கல்வி நிறுவனங்கள் என 20க்கும் மேற்பட்ட தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வந்து மிகப்பெரிய தொழில் அதிபராக விளங்கினார். அதனால்தான் ராமஜெயம் இறந்து இத்தனை மாதங்களான பின்னும் எம்.டி என்றே அழைக்கின்றனர்.
அமைச்சரான அண்ணன்
நேரு 1989ல் தி.மு.க. ஆட்சியில் முதன்முதலாக அமைச்சராக அமர்ந்ததும், தனது வெளிமாநிலப் பிசினஸ் விஷயங்களில் இருந்து ஒதுங்கிய ராமஜெயம், திருச்சியில் நிரந்தரமாகத் தங்கி பிசினஸ்களை கவனித்து வந்தார். அண்ணனுக்கு ஒத்தாசையாக அரசியலுக்கு வந்தாலும், தனது அண்ணன் நேருவைப்போல் தீவிர அரசியலில் நேரடியாக இறங்கவில்லை.
நிலவிவகாரம்
ஆனாலும் கட்சிக்காரர்களுக்கு பிரச்னை என்றால், உடனுக்குடன் சரிசெய்வார். அதுமட்டுமல்ல திருச்சி ஏரியாவில் விற்பனைக்கு வந்தால், அதில் அங்கு அரங்கேறும் பிசினஸ் பிரச்னை, நிலம் கொடுக்கல் வாங்கல் என அனைத்திலும் ராமஜெயம் பெயர் அடிப்படாமல் இருக்காது. இதையெல்லாம் வைத்துதான் ஒரு கட்டத்தில், திருச்சியையே இவர் வளைத்துப் போட்டுவிட்டதாகவே சாதாரணமானவர்களைக்கூட பேச வைத்தது.
ஜெயலலிதா விமர்சனம்
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சிக்கு பிரசாரத்துக்கு வந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பிரசாரத்தின்போது தி.மு.க.வையோ, அதன் அமைச்சர்களையோ விமர்சிக்காமல், ராமஜெயத்தை பற்றியும் அவரின் செயல்பாடுகளைப் பற்றியும் அதிக நேரம் பேசினார். பதிலடியாக ராமஜெயம், 'ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா ஜெயிக்கவே முடியாது' என சவால்விட்டு ஸ்ரீரங்கத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆனந்தனுக்காக தேர்தல் வேலை செய்தார் ராமஜெயம். ஆனால் ஜெயித்தது என்னவோ ஜெயலலிதாதான்.
பாய்ந்த வழக்கு
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் மீது நில அபகரிப்பு வழக்கு பாய்ந்தது. கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார் ராமஜெயம். நேருவை கடலூர் சிறையில் அடைத்தனர். அக்டோபர் மாதம் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சடலமான ராமஜெயம்
ராமஜெயம் எப்போதும் உடம்பை பிட் ஆக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர். வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார். சிறையில் இருந்த வந்த பின்னர் அடக்கி வாசித்தாலும் கொலைக்கு முன் நடந்த விபத்து கொஞ்சம் முடக்கியது. ஆனாலும் 2012 மார்ச் 29ஆம் தேதி காலை தனது தில்லை நகர் வீட்டில் இருந்து வாக்கிங் போனார் அப்புறம் திரும்பவேயில்லை. தெரு முனையில் நின்று ஜட்ஜ் மணி என்பவரைச் சந்தித்து பேசிவிட்டு, 'சாஸ்திரி நகர் ஆபீஸுக்கு 7 மணிக்கு வந்துடுங்க சார்' என சொல்லிவிட்டுக் போன ராமஜெயத்தை, அதன் பின்னர் சடலமாகத்தான் பார்க்க முடிந்தது.
கொலை நடந்தது எப்படி
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட மார்ச் 29 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு, அவரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது வயிற்றில் சிறிதளவு ஆல்கஹால் இருந்ததாகவும், அவர் கொலை செய்யப்பட்டு 12 மணி நேரத்துக்கு மேலாகி இருக்கலாம் என்பதாகவும் தெரிவித்தாக தகவல் பரவியது. ராமஜெயத்தின் குடும்பத்தினர், அவருக்கு குடிப்பழக்கமே இல்லை என மறுத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம், ராமஜெயம் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
ஏழு தனிப்படைகள்
ராமஜெயத்தைக் கொலை செய்தவர்கள், அவரது மனைவிக்கு போன் செய்து நேருவின் நம்பரை கேட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. கொலை வழக்கைத் துரிதப்படுத்தும் விதமாக ஏழு தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கிளம்பிய வதந்திகள்
இந்நிலையில், 'ராமஜெயம் அன்று வீட்டுக்கே வரவில்லை, இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே கடத்தப்பட்டதாகவும், பெண் தகராறில் கொல்லபட்டதாகவும் கிளப்பிவிட்டார்கள். ஆனால் விசாரணையில், 'காலையில் வாக்கிங் சென்றபோதுதான் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார்' என்பது மட்டுமே உறுதிசெய்யப்பட்டது.ராமஜெயம் வாக்கிங் சென்றால் அவருடன் எப்போதும் சிலர் வாக்கிங் செல்வது வழக்கும். சம்பவம் நடந்த தினத்தன்று அவர்கள் உடன் செல்லவில்லையாம்.
நேருவின் கோரிக்கை
ராமஜெயம் கொலை நடந்த பொழுது முன்னாள் அமைச்சரும் ராமஜெயத்தின் அண்ணனுமான நேரு சென்னையில் இருந்தார். கொலை செய்தவர்கள் நேருவின் தொலைபேசி எண்ணை கேட்டு போன் செய்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது. இந்நிலையில் நேரு தனது தம்பி கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து ஆகவேண்டும் என பலமுறை காவல்துறை அதிகாரிகளை நேரிலும் போனிலும் கோரிக்கை வைத்துள்ளார்.
சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
கொலை நடந்து 90 நாட்கள் ஆகியும் மாநகர காவல்துறை எதையும் கண்டுபிடிக்கவில்லை என்று தொடரப்பட்ட வழக்கின் காரணமாக, அவ்வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. ரவுடி குரூப், தொழில் போட்டி, அரசியல் எதிரிகள், ராமஜெயத்தால் அவமதிக்கப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்களைத் தேடிப்பிடித்து விசாரித்தும் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை.
குடும்பத்திற்கு மட்டுமே
கடந்த மூன்றாண்டுகளில், காவல்துறையின் கவனம் நேருவையும் அவரது உறவினர்களையும் தான் சுற்றிச் சுற்றி வருகிறது. நேருவையும் சிபிசிஐடி போலீசார் நேரில் அழைத்து மணிக்கணக்கில் விசாரித்துள்ளனர். ஆனால் இன்றுவரை கொலைக்கான காரணம் என்ன என்பதை மட்டும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மனு கொடுத்த மனைவி
32 மாதங்களாக முடிவுக்கு வராத இந்த கொலைவழக்கில், உண்மை வெளியே வரவேண்டுமானால் சிபிஐக்கு வழக்கை மாற்றிக்கொடுங்கள். அப்படி மாற்றினால்தான் உண்மை வெளியே வரும் என ராமஜெயத்தின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு சி.பி.சி.ஐ.டி. சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், `ராமஜெயம் கொலை வழக்கில் 177 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் தேவை நிச்சயம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடுவோம்` என கூறியுள்ளனர். பதில் மனுவை விசாரித்த நீதிபதி மார்ச்.10 வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கநாதர் கண்டுபிடிப்பாரா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனக்காக களத்தில் இறங்கி வேலை செய்ய அண்ணன் ராமஜெயம் இல்லையே என்ற நினைவுகளோடு இம்முறை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் ஆனந்த்.
ராமஜெயம் கொலை வழக்கில் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் தமிழக போலீஸ் குழம்பி நிற்கிறதா. அல்லது வேண்டுமென்றே குற்றவாளிகளை தப்ப வைக்க பார்க்கிறதா? என்பதுதான் திருச்சிவாசிகளின் சந்தேகமாக இருக்கிறது. அது அந்த ஸ்ரீரங்கநாதருக்கே வெளிச்சம்.