சட்டசபை வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றம்- நீதிபதி பரிந்துரை
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட சட்டசபை தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. பேரவை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் முழு அமர்வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதேபோல் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதவிர கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ், மாபா பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர்களாக செயல்பட தடை விதிக்கக் கோரி தி.மு.க. எம்.எல்.ஏ. பிச்சாண்டி சமீபத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
சட்டசபை வழக்குகள்
இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 27ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, சட்டமன்றம் தொடர்பான வழக்குகள் என்பதால் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதனால் இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும். எனவே இந்த வழக்குகள் அனைத்தும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்குகளின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்கியது. தினகரன் சார்பில் அபிஷேக் சிங்வி ஆஜரானார். திமுக சார்பில் என்.ஆர். இளங்கோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.எஸ், வைத்தியநாதன், சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரம் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு என்ன ஆனது என்றார்.
அரசு வழக்கறிஞர் தகவல்
தகவல் இதற்கிடையே திட்டமிட்டு பேரவை செயலாளர் காலம் தாழ்த்துவதாக தினகரன் தரப்பினர் குற்றம் சாட்டினர். இதனையடுத்து 21 திமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர் விஜய நாராயண் தகவல் அளித்தார்.
நீதிபதி ரவிச்சந்திரபாபு
அப்போது நீதிபதி ரவிச்சந்திரபாபு, நான் இந்த வழக்குகளில் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். சட்டமன்றம் தொடர்பான இந்த அனைத்து வழக்குகளும் அரசியல் சாசனத்தோடு தொடர்புபட்டிருப்பதால், இந்த அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதி தலைமையிலான ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கருதுகிறேன். எனவே இந்த அத்தனை வழக்குகளையும் தலைமை நீதிபதி அவர்களுக்கு அனுப்புகிறேன் என்று கூறினார்.
நீதிபதி உத்தரவு
அப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர், தாங்கள் ஏற்கனவே இந்த வழக்குகளை விசாரித்தவர் என்ற முறையில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு, இல்லை நான் அந்த பெஞ்ச்சுக்கு வரமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.
சட்டசபை வழக்குகள் மாற்றம்
முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடந்த வழக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ், பாண்டியராஜன் அமைச்சர் பதவியை பறிக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு , 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரிதான் என் சமூக ஆர்வலர் செம்பியன் தேவராஜன் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் அனைத்தையும் கூடுதல் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.