ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன்?- தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி 'குட்டு'
சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது என்ற போதிலும், இந்த சட்டத்தை யாரும் பின்பற்றியதாக தெரியவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்றும், ஹெல்மட் அணியாவிட்டால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக தலைமை நீதிபதி கவுல் கூறுகையில், சாலையில் பெரும்பாலானோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்லும் மாணவர்கள் கூட தலைக்கவசம் அணிந்து செல்வதில்லை.
ஹெல்மெட் அணியாமல் செல்வோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?. எந்த சட்டத்தையும் முறையாக, தொடர்ந்து பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஹெல்மெட் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தாதது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி கவுல் உத்தரவிட்டுள்ளார்.