வெள்ளத்துக்கு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என அரசாங்கமே கைவிரிக்கலாமா?
ஒரு அரசாங்கமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என அரசாங்கம் கூறியிருப்பது அதன் செயலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.
Recommended Video

சென்னை: சென்னையை மூழ்க வைக்கும் மழைவெள்ள பாதிப்புகளுக்கு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றவே முடியவில்லை என தமிழக அரசாங்கமே சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருப்பது என்பது அரசின் செயலற்ற தன்மையைத்தான் காட்டுகிறது.
தமிழகத்தில் நீர்நிலைகளை கையகப்படுத்தி அவற்றில் கட்டிடங்கள் கட்டுவதில் நமது அரசியல்வாதிகளுக்கு சளைத்தவர்கள் எவரும் இல்லை. அதுவும் ஆளும் கட்சி அமைச்சர்கள், அரசியல்வாதிகள் எனில் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஆமாம் சாமீ போட்டு ஆட்டைய போட அனுமதித்து விடுகின்றனர்.
சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இதுதான் யதார்த்தம். இன்றைய சென்னை பெருநகரமே பல நூறு நீர்நிலைகளின் சவக்குழிகள் மீது எழும்பியிருக்கிறது.

2015-ல் மூழ்கிய சென்னை
மழைவெள்ள காலங்களில் அந்த நீர் நிலைகளுக்கு காலம் காலமாக வந்து கொண்டிருந்த நீர்தான் இன்று அந்த கட்டிடங்களையும் குடியிருப்புகளையும் மூழ்கடித்து பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு சென்னையை செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் மூழ்கடித்தது.

பலி அதிகரிப்பு
அது முழுவதுமாக தமிழக அரசின் பொறுப்பற்ற நிர்வாக திறன்மையால் உருவாக்கப்பட்ட மிக மோசமான பேரழிவு. அதில் நூற்றுக்கும் அதிகமானோர் மாண்டு போயினர். தென் சென்னையே மூழ்கிப் போனது.

முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை
இந்த வெள்ளத்தைத் தொடர்ந்து அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பாழாய் போன அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் தாங்கள் பெற்ற லாஞ்ச லாவண்யத்துக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சிகளை கைவிட வைத்துவிட்டனர்.

ஒப்பாரி வைக்கும் அரசு
அத்துடன் மழை வரப்போகிறது என எச்சரிக்கை விடுத்தபோதும் கிஞ்சித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இப்போது நல்லபிள்ளையாக, ஆக்கிரமிப்புகளே வெள்ளத்துக்கு காரணம்; எவ்வளவோ முயற்சித்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என ஒப்பாரி வைத்திருக்கிறது தமிழக அரசு.

கடும் நடவடிக்கை தேவை
தமிழக அரசின் இந்த வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் அடியோடு நிராகரித்து, நீர்நிலைகள் எவை? கழிவு நீர் கால்வாய்கள் எவை? ஆக்கிரமிப்புகள் எவை? என பட்டியலிட்டு இத்தனை நாளைக்குள் இடித்தாக வேண்டும் என சாட்டையை கையிலெடுப்பதுதான் சென்னைவாசிகளை வெள்ளத்தில் மீட்கும் ஒற்றை வழியாகும்.












Click it and Unblock the Notifications