சசிக்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கு தள்ளுபடி! அதிமுக விவகாரத்தில் தலையிட தகுதி இல்லை- ஹைகோர்ட்!
அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக சசிகலா புஷ்பா வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதிமுக விவகாரங்களில் சசிகலா புஷ்பா தலையிட தகுதி இல்லை எனவும் ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலாவை நியமிக்க கூடாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட சசிகலா புஷ்பாவுக்கு தகுதி இல்லை என்ற அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்று வழக்கை முடித்து வைத்தது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலராகியுள்ளார் சசிகலா நடராஜன். முன்னதாக அதிமுகவின் சட்ட விதிகளின்படி கட்சி உறுப்பினராக 5 ஆண்டுகாலம் தொடர்ந்து நீடிக்காதவர் சசிகலா நடராஜன்; ஆகையால் சசிகலா அதிமுக பொதுச்செயலராக முடியாது என ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனிடையே கடந்த மாதம் 28-ந் தேதி அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவதற்கான விண்ணப்பம் வாங்க லிங்கேஸ்வரன், அக்கட்சி தலைமை அலுவலகம் சென்றிருந்தார். அப்போது சசிகலா ஆதரவாளர்கள் அவரை கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் கடந்த மாதம் 29-ந் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 31-ந் தேதி அதிமுக பொதுச்செயலராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் அதிரடி தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு முடிவடைந்துவிட்டது; அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிட அக்கட்சி உறுப்பினராக இல்லாத சசிகலா புஷ்பாவுக்கு தகுதி இல்லை; ஆகையால் சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதிமுகவின் உறுப்பினராக இல்லாத சசிகலா புஷ்பாவுக்கு வழக்கைத் தொடர தகுதி இல்லை என்ற அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மனுவை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.