அடுத்த வாரம் திருமணம்.. தந்தை திடீர் இறப்பு.. நிலைகுலைந்த குடும்பம்.. சடலம் முன்பு தாலி கட்டிய மகன்
உயிரிழந்த தந்தை முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்- கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி
கள்ளக்குறிச்சி: உயிரிழந்த தந்தையின் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). திமுக பிரமுகரான இவர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அய்யம்மாள் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவருடைய மகன் பிரவீன். இவர் பிகாம் பட்டதாரி. இவருக்கும் இவருடைய உறவினர் சென்னை மேடவாக்கத்தில் உள்ள சண்முகநாதன்- சுபாஷினி தம்பதியரின் மகள் சொர்ணமால்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர்.

நிச்சயதார்த்தம்
இவர்களுக்கு அண்மையில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில் வரும் 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருமண பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு நண்பர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு பத்திரிகை கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் ராஜேந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

மருத்துவமனை
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். மகனுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராஜேந்திரன் இறந்தது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.

தந்தையின் ஆசிர்வாதம்
ஆனால் பிரவீனுக்கு மட்டும் தனது தந்தையின் ஆசிர்வாதம் வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதோடு தனது தந்தையின் முன்புதான் தனது திருமணம் நடைபெற வேண்டும் என்றும் இருந்தது. இந்த நிலையில் தனது விருப்பத்தை தனது குடும்பத்தினரிடம் பிரவீன் கூறியுள்ளார். இதுகுறித்து அவருடைய குடும்ப பெரியவர்கள் யோசனை செய்து பிரவீனின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

திருமணம்
இதையடுத்து பிரவீன்- சொர்ணமால்யாவுக்கு திருமணம் நடந்தது. முன்னதாக பிரவீன் தனது தாய்க்கும் இறந்த தந்தைக்கும் பாத பூஜை செய்தார். இதையடுத்து உறவினர்கள் அட்சதை தூவ அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். தந்தையின் கையில் அட்சதையை கொடுத்து அவரது கையால் மற்றவர்கள் தூக்கிபிடித்து தூவ வைத்தனர். இதன் பின்னர் அங்கிருந்து ராஜேந்திரனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கொட்டும் மழை
கொட்டும் மழை என்றும் பாராமல் தனது தந்தை கண் முன்பே திருமணம் நடைபெற வேண்டும் என நினைத்து தனது விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்து பின்னர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் சம்பவத்தை நினைத்து உறவினர்களும் ஊர் மக்களும் மெய் சிலிர்த்தி போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications