கடலோர மாவட்டங்களில் கத்திரி வெயில் உச்சம்: சென்னையில் 106 டிகிரி கொளுத்தியது
சென்னை: தமிழக உள்மாவட்டங்களை விட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. கத்திரிவெயில் முடிய இன்னும் இருதினங்களே உள்ளநிலை வெயில் கொளுத்திவருவதால் சென்னைவாசிகள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியதில் இருந்து கடலோர மாவட்டங்களை விட உள்மாவட்டங்களான சேலம், தருமபுரி, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் கடுமையான வெயில் நிலவி வந்தது.அதேநேரத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் சற்று குறைவாகவே வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.
கடலோரமாவட்டங்களில் வெயில்
ஆனால் கடந்த சில நாள்களாக உள்மாவட்டங்களை விட கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் மற்ற இடங்களை விட சென்னையிலேயே அதிகபட்ச வெப்பம் பதிவாகி வருகிறது.
110 டிகிரி வெப்பம்
கடந்த மே 23-ஆம் தேதி, 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் 110 டிகிரி வெயில் பதிவானது. மேலும் கடலோரப் பகுதிகளில் வீசும் அனல் காற்றும் பொதுமக்களை கடுமையான இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது.
வெப்பச்சலனம் மழை
கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக வெப்பச்சலனம் ஏற்பட்டு, மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வெப்பச்சலனத்தின் காரணமாக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. அதே வேளையில் சில நாள்களாக உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாகவே உள்மாவட்டங்களை விட கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகமாக பதிவாகிறது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 106 டிகிரி வெயில்
இந்த நிலையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 106 டிகிரி வெயில் ஞாயிற்றுக்கிழமை பதிவானது. மேலும் வேலூரில் 101 டிகிரி வெயிலும் மதுரை, புதுச்சேரியில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
சேலம், கோவை
கரூர் பரமத்தி, பாளையங்கோட்டையில் 99 டிகிரி வெயிலும், திருச்சியில் 98டிகிரியும் பதிவாகியுள்ளது. சேலம் 97டிகிரி, கோவை 96 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. கொடைக்கானலில் 68 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
குமரியில் மழை
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது. குளச்சலில் அதிகபட்சமாக 64 மி.மீ. மழை பதிவானது.
கன்னியாகுமரி அருகே கடலில் ஏற்பட்ட காற்றத்தழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடந்த 15 நாள்களுக்கு முன்னர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதன்பின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
அணைகளுக்கு நீர்வரத்து
இந்நிலையில், சனிக்கிழமை மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்தது. இரணியலில் 43 மி.மீ., குளச்சலில் 64 மி.மீ., ஆனைக்கிடங்கில் 20 மி.மீ., திருவட்டாறில் 7 மி.மீ., முள்ளங்கினாவிளையில் 33 மி.மீ., கோழிப்போர்விளையில் 3 மி.மீ. மழை பதிவானது.
அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லை. எனினும், பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு வினாடிக்கு 23 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 20.70 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 45.65 அடியாகவும் உள்ளது.
விவசாயப்பணிகள் தொடக்கம்
மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். கடந்த 15 நாள்களுக்கு முன்னர் பெய்த மழையால், குளங்கள் ஓரளவுக்கு நிரம்பி உள்ளன. எனினும், விவசாயப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள ஜூன் முதல்வாரத்தில் அணைகளைத் திறப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.