2080ல் வெயிலில் வெந்து மடிவோர் எண்ணிக்கை 2 மடங்காகும்: எச்சரிக்கும் ஆய்வு
சென்னை: வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திர கால வெயிலை விட அனல் காற்று வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்றாலே படபடப்பும், மயக்கமும் உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது. இந்த வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.
இது ஒருபுறம் இருக்க இந்திய நகர்ப்புறங்களில், 2080ல், வெயிலின் வெப்பத்தால் உண்டாகும் உயிரிழப்பு, இரு மடங்காக உயரும் என,அகமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை மையம் எச்சரித்துள்ளது. வெப்பத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்தும் இந்தியாவின், 57 நகர்புறங்களில், அதிகரித்து வரும் வெப்பம் குறித்து ஐ.ஐ.எம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் முடிவில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெயிலுக்கு பலி
நாட்டின் மொத்த மக்கள் தொகையில், இந்த நகர்ப்புற மக்கள், 15.70 கோடி என்ற அளவில் உள்ளனர். இந்தாண்டு கோடை வெயிலுக்கு, 2,000 பேர் பலியாகியுள்ளனர்.
பலி எண்ணிக்கை உயரும்
நகர்புறங்களில், இந்த வகையிலான இறப்பு விகிதம், இந்த நுாற்றாண்டின் இறுதியில்,தற்போதைய,71 சதவீதத்தில் இருந்து,140 சதவீதமாக உயரும். குறிப்பாக, டெல்லி, ஆமதாபாத், பெங்களுரு, மும்பை, கோல்கட்டா ஆகிய நகரங்களில், இறப்பு அதிகரிக்கும்.
உயரும் வெப்பநிலை
தற்போதைய சிறிய நகரங்கள்,மக்கள் தொகை பெருக்கத்தால், பெரிய நகரங்களாக மாறும்போது, வெப்பத்தின் தாக்கமும், ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். வெப்பம், 3.3 டிகிரி சென்டிகிரேட் முதல், 4.8 சென்டிகிரேட் வரை நிலையாக உயர்ந்திருக்கும்.
பாதிப்பு அதிகரிக்கும்
வளரும் நாடுகளில் இத்தகைய பாதிப்புகள் அதிகம் இருக்கும். மாறி வரும் தட்ப வெப்ப நிலை, மிகப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அரசு, இதை சமாளிக்கத் தேவையான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.