சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒருசில் இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேசமயம் சென்னையில் கடந்த மாதம் இறுதியில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது.
கடந்த இரண்டு நாட்கள் வெயில் வெழுத்து வாங்கிய நிலையில் தற்போது சென்னையில் மழை பெய்து வருவது பொது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல், அண்ணா சாலை, சிந்தாரிப்பேட்டை உள்பட பலபகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
தி.நகர், தேனாம்பேட்டை, நந்தனம், அசோக்நகர் பகுதிகளில் மழை பெய்தது. சூளைமேடு, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், பல்லாவரம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை கொட்டியது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
தரமணி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வேளச்சேரி, குரோம்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
கனமழை காரணமாக முன்ஏற்பாடு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இருப்பினும் வெயில் வாட்டிய நிலையில் மழை பெய்வது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.