சென்னையில் இடி மின்னலுடன் பேய் மழை...சாலைகளில் வெள்ளம்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
சென்னை: வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, தாழ்வுபகுதியாக வலுப்பெற்று வருவதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் புறநகர்பகுதிகளிலும் பெய்துவரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
வெள்ளம் காரணமாக மாலை அலுவலகம் முடிந்து வீடுதிரும்புபவர்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினர். ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இரவு முழுவதும் மழை பெய்தது. இன்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக தூறல் போட்டது.
இந்த நிலையில் மாலை 6மணியளவில் இருந்து இடியும் மின்னலுமாய் கனமழை கொட்டிவருகிறது. மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, அடையாறு,நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், அம்பத்தூர், தாம்பரம் என சென்னையில் நகர்பகுதிகளிலும், புறநகரிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்த காரணத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications