சசி ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வீடுகளுக்கு கூடுதல் பாதுகாப்பு - போலீஸ் முன்னெச்சரிக்கை
தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சசிகலா ஆதரவு அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் வீடுகளுக்கு கூடுதல்போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை : அதிமுக தொண்டர்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து தமிழகம் முழுவதும் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் அதிமுக
எம்எல்ஏக்களின் வீடுகள், அலுவலகங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் எழுப்பிய கலகக்குரலால் கட்சி அதிமுக பிளவு பட்டது. சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் வந்தனர்.
இதனையடுத்து இருக்கிற எம்எல்ஏக்களை தக்கவைக்க படாத பாடு பட்டனர்.
மாமல்லபுரம் அருகே உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்ட்ஸ்க்கு கொண்டு போய் அடைத்து வைத்தனர். பல வசதிகளைக் கொண்ட
ஆடம்பர சிறையில் தங்கியிருந்த எம்எல்ஏக்களுக்கு அவர்கள் கேட்டதெல்லாம் கொடுத்து தாஜா செய்தது சசிகலா கும்பல்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றால் சசிகலாவிற்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக்குழு தலைவராக தேர்வு
செய்தனர் அதிமுக எம்எல்ஏக்கள். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிச்சாமி.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். 122 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் வெற்றியும் பெற்று விட்டார்.
ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு ஆதரவு
11 எம்எல்ஏக்கள் தொகுதி மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து ஓபிஎஸ் பக்கம் சென்றனர். இதனால் அவர்களை அந்த தொகுதி மக்கள்பாராட்டினர். தொகுதிக்கு செல்லும் எம்எல்ஏக்களை ஆரத்தி எடுத்து வரவேற்பு வருகின்றனர்.
தொண்டர்களை சந்திக்க அச்சம்
தொண்டர்களின் மனநிலை சசிகலாவிற்கு எதிராக உள்ளது. எனவே சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்த எம்எல்ஏக்கள் தொகுதிக்கு செல்வது எப்படி என்று யோசித்து வருகின்றனர். தமிழகத்தில் பல பகுதிகளில் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தொகுதி மக்களை சந்திப்பது என்று தெரியாமல் தவித்து
வருகின்றனர். அவர்களின் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
தொண்டர்களின் எதிர்ப்பு கோபமாக மாறியுள்ளது. முதல் தாக்குதலுக்கு ஆளானது அவினாசியில் உள்ள சபாநாயகர் தனபால் அலுவலகம்தான். மர்மநபர்கள் கல்வீசியதில் அலுவலகக் கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் வீடுகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் பாதுகாப்பு
மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் வீடுகளுக்கும் எம்எல்ஏக்கள் போஸ், நீதிபதி, ராஜன் செல்லப்பா வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வர் வீட்டுக்கு பாதுகாப்பு
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீடு, எடப்பாடியில் உள்ள பழனிச்சாமியின் அலுவலகம் முன்பாக கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீசர் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டையன் வீடு
ஈரோடு குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீடு, அலுவலகத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் ஓ.எஸ் மணியன், கரூரில் விஜயபாஸ்கர் வீடுகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.