புதுவையில் இன்று முதல் 'கட்டாய ஹெல்மெட்' அமலுக்கு வந்தது
புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இன்று முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இரு வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹெல்மெட் அணிவது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுவையிலும் மே 1-ந்தேதி முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி 2 மாதங்களுக்கு முன்பே அறிவித்தார்.
இதனை தொடர்து புதுவை காவல் துறையினர் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும் கல்லூரி மாணவர்கள் மூலமும் இதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமலுக்கு வந்தது.
ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை கண்காணிக்க போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். ஹெட்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.