அரசு உத்தரவு போட்டால்தான் அணிய வேண்டுமா ஹெல்மெட்?
சென்னை: "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது" இது மகாபாரதப் போரில் அர்ஜூனனிடம் கண்ணன் சொன்ன வார்த்தை. நம் தலைக்கு வரும் ஆபத்தை தலைக்கவசம் காக்கும் என்பதனால்தான் ஹெல்மெட் அணிய வலியுறுத்துகின்றனர். என்னதான் விழிப்புணர்வு மேற்கொண்டாலும் யாரும் கேட்பதாக இல்லை. கட்டாய ஹெல்மெட் சட்டம் கொண்டு வந்தாலும் நீதிமன்றம் போய் தடையாணை பெற்று வருகின்றனர்.
அடிக்கடி நடைபெறும் விபத்துக்கள் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு ஜூலை 1 முதல் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
அரசின் எச்சரிக்கையை அடுத்து இதுநாள் ஈ ஓட்டிக்கொண்டிருந்த ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள், குழந்தைகளுக்கும் ஹெல்மெட் வாங்க வருவதால் தேவையை பயன்படுத்தி விலையை இருமடங்காக உயர்த்தி விட்டனர் கடைக்காரர்கள்.
லைசென்ஸ் பறிமுதல்
ஹெல்மெட் அணியாவிட்டால் லைசென்சை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும். தரமான ஹெல்மெட் வாங்கிய பிறகே அதை திரும்பப் பெற முடியும் என்றும் முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசும் எச்சரித்துள்ளதை அடுத்து இதுவரை ஹெல்மெட் வாங்காதவர்களும் இப்போது வாங்குகிறார்கள்.
உயிரை காக்கும்
பெரும்பாலான இரு சக்கர வாகன விபத்துகளில் தலையில் அடிபடுவதாலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஹெல்மெட் அணிவதன் மூலம் உயிரிழப்புகளையோ தலையில் அடிபடுவதையோ 30 சதவீதத்துக்கும் மேல் தடுக்க முடியும்.
இருசக்கர வாகன விபத்து
காரில் செல்பவரைவிட பைக்கில் செல்பவருக்கு விபத்தால் உயிரிழப்பு ஏற்பட 32 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. மோசமான விபத்துகளின்போது ஹெல்மெட் அணியாதவர்கள் உயிரிழக்க 40% அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
கட்டாய ஹெல்மெட்
விபத்து ஏதேனும் ஏற்பட்டால் ஹெல்மெட் அணிந்தவரைவிட அணியாதவருக்கு மூன்றிலிருந்து நான்கு மடங்கு மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவேதான் ஹெல்மெட் அணியவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
அலைமோதும் கூட்டம்
ஹெல்மெட் அணிவதற்கான காலக்கெடு நெருங்க நெருங்க கடைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப ஒவ்வொரு கடைகளிலும் பல்வேறு டிசைன்களில் ரூ.295 முதல் ரூ.18 ஆயிரம் வரை ஹெல்மெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனித்தனியாக ஹெல்மெட்டுகள் உள்ளன.
ஞாயிறன்றும் விற்பனை
சாதாரண நாட்களில் தினமும் 20 முதல் 25 பேர் வந்து ஹெல்மெட் வாங்கி செல்வார்கள். ஆனால் ஞாயிறன்று காலை முதலே ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளதாக ஆயிரம் விளக்கு பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ முத்திரை
ஹெல்மெட்டில் ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா? என்பதை பார்த்த பின்பு தான் அனைவரும் வாங்க ஆரம்பிக்கிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் ரூ.450 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. பின்னால் அமர்ந்து செல்பவர்கள் அணியும் ஹெல்மெட்டுக்கு ஐ.எஸ்.ஐ முத்திரை அவசியமில் என்கின்றனர் கடைக்காரர்கள்
இருமடங்கு விலை
கடந்த மாதம் வரை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டுகள் தற்போது 1500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ முத்திரையற்ற ஹெல்மெட்டுகள் தற்போது 450 ரூபாய் முதல் 500 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அரசாணை போட்டால்தானா?
ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம், லைசென்ஸ் பறிமுதல் என அரசு எச்சரித்தால் மட்டும்தான் ஹெல்மெட் அணியவேண்டுமா? நம் உயிரை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நம்முடைய கடமையல்லவா?