வரலாற்று பெருமை கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தனி அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்!
கலை கோயில்கள் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தனி அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
திருவண்ணாமலை : கலை கோயில்கள் கொண்ட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தனி அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு சார்பில் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அருங்காட்சியக ஆணையர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலப்பரப்பு சங்கம் காலம் முதலே ஏராளமான வரலாற்றை கொண்டு திகழ்கிறது.
மேலும் இந்த பகுதியை பல்லவர்கள் , சோழர்கள் , பாண்டியர்கள் , ஹோய்சாலர்கள், விஜயநகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் ஆண்ட போது ஏராளமான கலை கோயில்கள், மண்டபங்கங்கள் ஆகியவற்றை எழுப்பி கலையின் பெருமையை பறை சாற்றி உள்ளனர்.
ஆர்வம் குறைந்து வருகிறது
ஆனால் தற்பொழுது உள்ள சூழலில் , வரலாற்றின் மீதும் கலை கோயில்களின் மேலும் மக்களுக்கு ஆர்வம் குறைய தொடங்கி, பெரும்பாலான கோயில்கள் மற்றும் சிலைகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்றும் சிலைகளும் , நடுகற்களும் கவனிப்பின்றியும் கேட்பார் இன்றியும் கைவிட பட்ட உள்ள நிலையில் ,அத்தகைய விலைமதிப்பற்ற கலை பொக்கிஷங்களை பாதுகாக்கும் பொருட்டு வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க படுகிறது.
நீண்ட எதிர்பார்ப்பு
திருவண்ணாமலையின் தொன்மையை மக்களுக்கு எடுத்து செல்லவும், அடுத்த தலைமுறை இது போன்ற கலை பொக்கிஷங்களை காணும் வாய்ப்பை ஏற்படுத்திட "திருவண்ணாமலை மாவட்டத்திற்கென" தனி அருங்காட்சியகம் அமைத்து மக்களின் பார்வைக்கு வைத்திட வேண்டும் என்பது இப்பகுதி வரலாற்று ஆர்வலர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோரிக்கை மனு
எனவே எல்லா மாவட்ட தலை நகரங்களிலும் உள்ளது போல, திருவண்ணாமலை மாவட்டத்திற்கென தனி ஒரு அருங்காட்சியகம் அமைத்திட "திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு " மூலம் திருவண்ணாமலை சட்டமனற உறுப்பினர் திரு எ வ வேலு அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தமிழக அரசு மற்றும் சம்மந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை வைத்து , உடனடியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அருங்காட்சியகம் அமைத்திட விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ எ.வ.வேலு உறுதி அளித்துள்ளார்.
ஆட்சியரும் உறுதி
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் கேட்பாரற்று உள்ள சிலைகளை பாதுகாத்திட மாவட்ட ஆட்சியரிடமும் , தமிழக அருங்காட்சியக ஆணையரிடமும் கோரிக்கை வைத்த போது, இது போன்று உள்ள சிலைகள் , கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவற்றை புதிதாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கென ஒரு அருங்காட்சியகம் அமைத்து அதில் காட்சிப்படுத்திட முறையாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரில் ஒரு அருங்காட்சியகம் அமைத்து மாவட்டத்தில் உள்ள சிலைகளை காப்பாற்றிட நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியரும் உறுதி அளித்துள்ளார்.