ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த ஜெயக்கொடி ஏன் மாற்றப்பட்டார்?... அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!
குட்கா ஊழல் வழக்கை விசாரித்து வந்த கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி திடீரென மாற்றப்பட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : குட்கா ஊழல் வழக்கை விசாரித்து வந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி ஐஏஎஸ், திடீரென மாற்றப்பட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுகவின் ஆர் எஸ் பாரதி புதிய ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக மோகன் பியாரே நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு ஹைகோர்ட் இந்த கேள்வியை கேட்டுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனைக்காக அமைச்சர், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சென்னையில் குட்கா குடோனில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையின் போது கிடைத்த டைரி ஆதாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி ஊழல் கண்காணிப்புத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஜெயக்கொடி குட்கா ஊழல் விவகாரத்தில் சிறப்பான விசாரணை நடத்துவதாக மதுரைக்கிளை நீதிமன்ற நீதிபதி பாராட்டு தெரிவித்த நிலையில், திடீரென ஜெயக்கொடி மாற்றப்பட்டு ஊழல் கண்காணிப்புத் துறை ஆணையராக மோகன் பியாரே நியமிக்கப்பட்டார். மோகன் பியாரேவின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் ஆர்எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ஜெயக்கொடி நல்ல முறையில் குட்கா ஊழல் விசாரணையை நடத்தி வந்த நிலையில் அவர் ஏன் திடீரென மாற்றப்பட்டார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications