சென்னை நகைக்கடை அதிபர் கொலைவழக்கு: தூக்கு தண்டனை ரத்து... குற்றவாளிக்கு 45 ஆண்டுகள் சிறை
சென்னை: சென்னை நகைக்கடை உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம், அதற்குப் பதில் 45 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, நெற்குன்றத்தில் நகைக்கடை நடத்தி வந்தவர் குணராம். கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நகைக்கடையில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டார். நகைக்கடையும் அப்போது கொள்ளையடிக்கப்பட்டது.
போலீசாரின் தீவிர விசாரணைக்குப்பின் இது தொடர்பாக ராமஜெயம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம், கடந்தாண்டு ராமஜெயத்துக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கூடவே, இந்திய தண்டனைச் சட்டம், 449 (அத்துமீறி நுழைதல்), 392 (கொள்ளை) ஆகிய பிரிவுகளின் கீழ், தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ராமஜெயம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் வாதாடினார்.
வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சுதாகர் மற்றும் பிரகாஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', ராமஜெயத்துக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை ரத்து செய்தது. ஆனால் அதற்குப் பதில் 25 ஆண்டு ஆயுள் தண்டனை மற்றும் இரு பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட, தலா 10 ஆண்டு தண்டனையும் சேர்த்து, மொத்தம் 45 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.