சசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன்... உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
எம்.பி. சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த பெண்கள் அளித்த புகாரில் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: அதிமுகவுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவை அ.தி.மு.கவிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் பல்வேறு வகையில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தின் அவையில் நடுநாயகமாக நின்று 'என்னை எனது தலைவர் கன்னத்தில் அறைந்தார் என்று கூறி அழுதார்'. பெண் எம்பிக்கு உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர் அழுதது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சசிகலா புஷ்பாமீது, அவர் வீட்டில் பணிபுரிந்த பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் தூண்டுதல் காரணத்தால் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று விமர்சனம் எழுந்தது.
அதையடுத்து, திசையன்விளை காவல்நிலையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது ஆள் கடத்தல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையினரின் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக, சசிகலா புஷ்பா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில், நீதிபதி நிஷாபானு, சசிகலா புஷ்பா உள்ளிட்ட மூன்று பேருக்கு முன் ஜாமீன் வழங்கி ஆணையிட்டுள்ளார்.