15-வது சட்டசபையில் முதன்முறையாக கூண்டோடு கட்டாக திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
சென்னை : இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்பது போல... 15வது தமிழக சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக திமுக எம்.எல்.ஏக்கள் இன்று குண்டுக்கட்டாக கூண்டோடு வெளியேற்றப்பட்டு, ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, முன்பெல்லாம் திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றுவார்கள். இப்போது அப்படியில்லைக ச்சத்தீவு மற்றும் மதுவிலக்கு பிரச்னைகள் குறித்து பேசினால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விடுகிறார்கள் என்று கூறினார். இன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா அவைக்கு வரவில்லை.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன், 'நமக்கு நாமே பயணம் மூலம் கோட்டையை பிடிப்போம்' என்று கூறியவர்கள்.., என்று மு.க. ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்டனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் தெரிவித்த கருத்தை வெளியிட்ட விமர்சனத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகர் தனபாலை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத சபாநாயகர், 'நமக்கு நாமே பயணம் மூலம் கோட்டையை பிடிப்போம்' என்று கூறியவர்கள் என்றுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குணசேகரன் தெரிவித்துள்ளார். அவர் யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை, எனவே, அந்தப் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார். அப்போது சபாநாயகருக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். பின்னர் சபைக்கு வந்த மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே பயணம் குறித்த விமர்சனம் சபை குறிப்பில் இருக்கட்டும். அதிமுக பொதுக் குழுவில் கூட்ட நமக்கு நாமே பற்றி முதல்வர் ஜெயலலிதா கதை ஒன்றை கூறியிருந்தார் என்றார்.
உடனே சபாநாயகர் தனபால், அதிமுக பொதுக்குழு குறித்து ஸ்டாலின் கூறியதை சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அப்படியானால் அதிமுக எம்.எல்.ஏ. குணசேகரன் நமக்கு நாமே பேசியது குறித்தும் நீக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் மறுத்ததால் ஒரே கூச்சல் குழப்பம் என களேபரமானது.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுமார் 15 நிமிடங்கள்வரை தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவைக்காவலர்களை அழைத்த சபாநாயகர் தனபால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து, சபையின் மையப்பகுதிக்கு வந்த அவைக் காவலர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், துணைத்தலைவர் துரைமுருகன் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 88 பேரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று சட்டசபையில் இருந்து வெளியேற்றினர்.
இதன்பின்னர், அவை முன்னவரான நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர், திமுக உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிவதாக கூறினார். இதனை ஏற்ற சபாநாயகர், அவை முன்னவர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது என்று கூறினார். இன்று வெளியேற்றப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒருவார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்வதாகவும் சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
15வது தமிழக சட்டசபை கூடி பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் இந்த நிலையில் முதன்முறையாக அவையில் 88 திமுக எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.