கொத்துக் கொத்தாய் தற்கொலை செய்த உழவர்கள்; பயிர்க்கடன் தள்ளுபடி அவசியம்- ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாட்டில் விவசாய விளைச்சல் இல்லாமல் கடந்த 5 ஆண்டில் 2423 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மீதமிருக்கும் உழவர்களையாவது காப்பாற்றும் வகையில் எல்லா பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில், "உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்று திருவள்ளுவர் தொடங்கி அனைத்து சான்றோரும் உழவின் சிறப்பையும், உழவர்களின் பெருமைகளையும் போற்றுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் உழவர்களின் நிலைமை குறித்து வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தான் பெரும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
கொத்துக் கொத்தாக தற்கொலை:
தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டில் தொடங்கி 2015 ஆம் ஆண்டு வரை மொத்தம் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2011ஆம் ஆண்டில் 623 பேர், 2012ஆம் ஆண்டில் 499 பேர், 2013ஆம் ஆண்டில் 105 பேர், 2014ஆம் ஆண்டில் 68 நில உரிமையாளர்கள், 827 விவசாயத் தொழிலாளர்கள் என 895 பேர், 2015 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் சுமார் 300 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
கடன் சுமையே காரணம்:
தமிழ்நாட்டு உழவர்களின் தற்கொலைக்கு மிக முக்கியமான காரணமாக கூறப்படுவது மீளமுடியாத கடன் சுமை தான். இதை எவராலும் மறுக்க முடியாது. வறட்சியும், வெள்ளமும் மாறிமாறி தாக்குவதால் உழவர்களால் வாங்கிய கடனை அடைக்கமுடியவில்லை. ஆண்டுக்காண்டு இழப்பு அதிகாரித்து வருவதால் உழவர்கள் வாங்கிய கடன்சுமையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடன் கட்டுக்கடங்காமல் செல்லும் போது உழவர்கள் தற்கொலை தடுக்க முடியாத ஒன்றாகி வருகிறது.
பயிர்கடன் தள்ளுபடி அவசியம்:
இத்தகைய சூழலில் உழவர்களை காப்பாற்ற வேண்டுமெனில், அவர்கள் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்வது தான் ஒரே தீர்வு ஆகும். ஆந்திராவும், தெலுங்கானாவும் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்கள் மற்றும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளன.
மானியமும் தேவை:
இந்த மாநிலங்களை பின்பற்றி, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்க்கடன்களையும் தமிழக அரசே செலுத்தி தள்ளுபடி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, புதிய கடன்களை தடையின்றி வழங்க கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்துவதுடன், அக்கடன்களுக்கு 10% மானியமும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
பாமக செய்யும்:
அடுத்த இருவாரங்களில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு செயல்படுத்த ஜெயலலிதா அரசு தவறினால், 2016 தேர்தலுக்குப் பிறகு பா.ம.க அரசு பதவியேற்றவுடன் பொதுத்துறை வங்கி கடன் தள்ளுபடி மற்றும் மானியத் திட்டம் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.