உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து பதில் தர ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு!
உள்ளாட்சி தேர்தலை 15 நாளில் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை : உள்ளாட்சி தேர்தலை 15 நாளில் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016 அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19-ந்தேதிகளில் நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பல அறிவுறுத்தல்கள் வழங்கியும் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
இதனால் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதத்திற்கு ஒரு முறை என தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாளில் வெளியிட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு மீது மார்ச் 23க்குள் பதில் தர உத்தரவிட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையர், தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.