போராடிய அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது- கோர்ட் அதிரடி உத்தரவு
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை : பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7ம் தேதி ஜாக்டோஜியோ அமைப்பைச் சேர்ந்த ஒரு பிரிவு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களும் இந்த போராட்டக் களத்தில் குதித்ததால் அரசுப் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் நீதிமன்ற தடையை மீறி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டித்த நீதிமன்றம்
இதனால் அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒரு மணி நேரத்திற்கு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். மேலும் அரசுடன் கலந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்னையால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
தலைமைச் செயலாளர் ஆஜர்
இதனால் அரசு ஊழியர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டிருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இன்று காலையில் மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜரானார்.
செப். 30ல் அறிக்கை
இந்த வழக்கில் பிற்பகலில் நடந்த விசாரணையின் போது, 7வது ஊதியக்குழுவை அமல்படுத்த அரசுக்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு செப்டம்பர் 30ம் தேதிக்குள் வல்லுநர் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்வதாகவும், இதனை நடைமுறைப்படுத்த 5 மாதங்கள் அவகாசம் ஆகும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
முடிவு செய்ய அவகாசம்
இதனை ஏற்க ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், 3 வார காலத்தில் அதாவது அக்டோபர் 13ம் தேதிக்குள் அரசு இது குறித்த இறுதி முடிவை அறிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பளம் பிடிக்கக் கூடாது
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது எந்த ஒழங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அவர்களின் 10 நாட்கள் சம்பளத்தை பிடித்தம் செய்யும் நடவடிக்கையையும் தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஈடு செய்ய பணி
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் வேறு நாட்களில் பணி செய்து தங்களது பணி நேரத்தை சரி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.