விடிய விடிய கனமழை - சென்னை, காஞ்சி உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் துவங்கியது. விடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மின்சார சேவையும் சில இடங்களில் தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மைதானங்களில் தண்ணீர் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. சேரும் சகதியுமாக காணப்படுவதால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 10 மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
சென்னையில் நேற்று பகலில் வெயிலடித்த நிலையில் மாலை நேரத்தில் வானம் இருண்டது. நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தது. அம்பத்தூர், ஆவடி, புளியந்தோப்பு, மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், வியாசர்பாடி, சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், நாகை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய சென்னை ஆட்சியர் அன்புச்செல்வன், பள்ளி வளாகங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருப்பதாலும், வானிலை ஆய்வு மையத்தின் மழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.