சட்டசபை விவகாரங்களில் சிபிஐ தலையிட முடியாது... ஹைகோர்ட்டில் எடப்பாடி பதில் மனு
அதிமுக எம்எல்ஏ லஞ்சம் பெற்ற வீடியோ குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் கூவத்தூரில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி தன் பதில் மனுவில் கோரியுள்ளார்.
டைம்ஸ் நவ்- மூன் டிவி ஆகிய இணைந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் சரவணன், கனகராஜ் ஆகியோர் மீது ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் கூவத்தூரில் தங்கவைக்கப்பட்ட 122 எம்எல்ஏ-க்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கப்பட்டதாக அவர்கள் பேசியிருந்தனர்.
இதுகுறித்து சட்டசபையில் விவாதிக்க மு.க ஸ்டாலின் கோரினார். எனினும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்பட்ட விவகாரத்தை சிபிஐ அல்லது வருவாய்துறையினரை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சட்டசபை சார்ந்த விஷயம் என்பதால் சிபிஐ, வருவாய் துறையினர் விசாரிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் தாக்கல் செய்த மனு விசாரிக்க தகுந்தது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் முதல்வர் எடப்பாடி கோரியுள்ளார்.
தமிழக சட்டசபை பேரவை செயலாளர் பூபதியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாக பூபதி தன் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பேர வீடியோ அடங்கிய சிடியை ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் ஸ்டாலின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.