ஹெச்.ஐ.வி இருப்பதாக தவறான ரிசல்ட்- நோயாளிக்கு மருத்துவமனை இழப்பீடு
சென்னை: சென்னையில் ஹெச்.ஐ.வி மருத்துவப் பரிசோதனையில் உண்மைக்கு மாறான தகவலை அளித்து மன உளைச்சலை உண்டாக்கிய மருத்துவமனை நிர்வாகம் வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆர்.மோகனன், அவரது மனைவி கே.ஆர்.பரிமளா மோகனன் ஆகியோர் மாநில நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வானேன். பின்னர், அந்த வேலையில் சேருவதற்கு முன் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு என்னை அனுப்பி வைத்தனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் எனக்கு ஹெச்.ஐ.வி நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை அளித்தனர். இதன் காரணமாக, அந்த நிறுவனத்தில் எனக்குக் கிடைத்த வேலை பறிபோனது. அதன்பிறகு, நான் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிட்டது. பின்னர் நானும், எனது மனைவியும் மற்றொரு மருத்துவமனையில் இதே பரிசோதனையை மேற்கொண்டதில் எங்களுக்கு ஹெச்.ஐ.வி நோய் இல்லை என தெரிவித்தனர்.
இவ்வாறு இருவேறுபட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததால், நான் மீண்டும் அந்த தனியார் மருத்தவமனைக்குச் சென்று பரிசோதித்ததில் எங்களுக்கு ஹெச்.ஐ.வி இல்லை எனத் தெரியவந்தது. அந்த மருத்துவமனையின் சேவைக் குறைபாடு, அலட்சியத்தால் எனது வேலை பறிபோனதோடு, மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிட்டது. எனவே, இழப்பீடாக ரூபாய் 30 லட்சம் வழங்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மாநில நுகர்வோர் குறைதீர் மன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள பதில் மனுவில் மோகனனை சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது என்றும், அதற்காக அவர் கட்டணம் செலுத்தவில்லை என்றும் கூறி அவரை வாடிக்கையாளராகக் கருத முடியாது என்று கூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரது மனைவிக்கு இழப்பீடு கோர உரிமையில்லை. எனினும், மருத்துவமனை தரப்பில் சேவைக் குறைபாடு இருந்துள்ளது ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவனை நிர்வாகம் மோகனுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சேவைக் குறைபாடு உள்ளிட்டவற்றுக்காக ரூபாய் 50,000, வழக்குச் செலவுக்காக ரூபாய் 10,000 வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.