6 மணி நேரமாக வெளுக்கும் மழை.. ஸ்தம்பித்தது சென்னை
சென்னையில் மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை : சென்னையில் கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வருகிறது. இன்று இரவு வடகிழக்குப் பருவமழை இன்னும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த திங்கட்கிழமையில் இருந்து பெய்து வருகிறது. நேற்று சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று காலை முதல் மிதமான வெயில் நிலவி வந்தது.
திடீரென மதியம் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பல்வேறு பகுதிகளிலும் தூறலுடன் மிதமான மழை பெய்தது. மாலை ஐந்து மணிக்கு மேல் மழை தீவிரமானது. சென்னையின் கடந்த நான்கு மணி நேரமாக விடாமல் கனமழை பெய்து வருகிறது.

இரவில் கன மழை பெய்யும்
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். ‘மேலும் ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என்றும், இன்று இரவு பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில்
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நான்கு மணி நேரத்தில் 6 செ.மீ., மழை பதிவாகி இருப்பதாக அவர் தெரிவித்தார். குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு' என்று அவர் தெரிவித்தார்.

சென்னைக்கு லீவு
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் ஆட்சியர். காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் ஸ்தம்பித்த சென்னை
பலத்த மழை காரணமாக சென்னை சாலைகளில் தண்ணீர் தேங்கி பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெரினா முதல் சாந்தோம் வரை போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கிறது. மீண்டும் வெள்ளக்காடு ஆகி இருக்கிறது சென்னை மாநகரம். சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்திவருகிறார்.

நகரமே மிதக்கிறது
இன்றைய மழைதான மிகப் பெரிய மழையாகும். மழையால் ஊரே பாதிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து பல பகுதிகளில் முடங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதற்கிடையே, கன மழை பெய்தாலும் கூட அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை திட்டமிட்டபடி நடக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications