'வீடுகளை இடிக்க வேண்டாம்' அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சிய பொதுமக்கள்.. காரைக்குடியில் பரபரப்பு
காரைக்குடி: முன்னறிவிப்பின்றி வருவாய்த் துறையினர் 65 வீடுகளை இடிக்க முயன்ற போது வீடுகளை இடிக்க வேண்டாமென பொதுமக்கள் அதிகாரிகள் காலில் விழுந்து கதறி அழுததால் காரைக்குடி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஓ.சிறுவயல் செல்லும் சாலையில் 50 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 49 பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. காலியாக இருந்த இடங்களில் 65க்கும் மேற்பட்டோர் ராஜீவ் காந்தி நகர் என்ற பெயரில் வீடு கட்டி வசித்து வந்தனர்.
இந்த வீடுகளை முன்னறிவிப்பின்றி போலீசார் பாதுகாப்புடன், தாசில்தார் கண்ணன் தலைமையில் வந்த வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் திடீரென அகற்றினர். அந்த நேரத்தில் பலர் வீடுகளில் இல்லை. ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்கள் வைத்திருந்த 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளும் இடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே 'வீடுகளை இடிக்க வேண்டாம்' என வருவாய்த் துறை அதிகாரிகளின் கால்களில் பொதுமக்கள் விழுந்து கெஞ்சினர். ஆனாலும், அதை பொருட்படுத்தாமல் 65 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எந்த முன்னறிவிப்பின்றி திடீரென அதிகாரிகள் வீடுகளை இடித்து தள்ளியுள்ளனர். இதனால் குழந்தைகளுடன் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு மாவட்ட நிர்வாகம், உரிய இடம் வழங்க வேண்டும் என்றனர்.